அரவக்குறிச்சி: தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவினருக்கு ஆதரவாக, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பிரசாரம் செய்து வரும் நிலையில், நட்டா எத்தனை முறை தமிழகம் வந்தாலும், பாஜகவுக்கு தமிழகத்தில் நோட்டாதான் கிடைக்கும் என நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் பேசினார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் களம் தீவிரமடைந்துள்ளது. மாநில கட்சிகளின் தலைவர்கள் பம்பரமாக சுழன்றி பணியாற்றி வரும் நிலையில், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தேசிய தலைவர்களும் களமிறங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா வாக்கு சேகரித்து வருகிறார். அ.தி.மு.க. கூட்டணியில், பாஜக  சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடுகிறது. அக்கட்சியின்  வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்தை ஆதரித்து, வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் சவுகார்பேட்டையில் நேற்று  தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ஜே.பி.நட்டா இந்தி மொழியிலேயே பேசி வாக்கு சேகரித்தார்.

இந்த நிலையில், ஜேபி நட்டாவின் தேர்தல் பிரசாரம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.  அரவக்குறிச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில்,  எத்தனை முறை நட்டா தமிழகத்திற்கு வந்தாலும் , அவர்களுக்கு (பாஜக) நோட்டாவுக்கு கீழ் தான் ஓட்டு விழும். பாரதிய ஜனதா கட்சி மனிதகுல எதிரி. தமிழ் மண்ணில் தாமரை மலராது’  என காட்டமாக விமர்சித்தார்.