மெல்போர்ன்: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வாங்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட், இந்த 14வது ஐபிஎல் தொடரில் ஆடமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தாண்டில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள ஆஷஸ் தொடர் மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள டி-20 உலகக்கோப்ப‍ை ஆகியவற்றுக்கு தயாராகும் வகையிலும், குடும்பத்துடன் சிறிதுகாலத்தை செலவழிக்கும் வகையிலும், அவர் அதிக வருவாய் கொழிக்கும் ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடரிலிருந்து அவர் விலகுவதன் மூலம், அடுத்த 2 மாதங்களுக்கு அவருக்கு ஓய்வு கிடைக்கும். தற்போது 30 வயதாகும் ஜோஷ் ஹேசில்வுட், கடந்த 2020 ஐபிஎல் சீசனில் சென்னை அணிக்காக 3 போட்டிகளில் ஆடினார்.

“கடந்த 10 மாதங்களாக, தனிமைப்படுத்தல், உயிர் வளையத்தில் இருத்தல் என்று நீண்ட உளைச்சலில் இருந்துவிட்டேன். எனவே, கிரிக்கெட்டிலிருந்து சிறிதுகாலம் ஓய்வெடுத்து, அடுத்த 2 மாதங்கள் வீட்டில் ஓய்வெடுக்க விரும்புகிறேன்” என்றுள்ளார் ஹேசில்வுட்.

அவரின் விலகல், சென்னை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.