’’பொன்னியின் செல்வன்’’ ரகசியம் உடைக்கும் ஜெயராம்..

இயக்குநர் மணிரத்னம் படம் தொடர்பான செய்திகள், படத்தின் ரிலீசுக்கு முன்பாக வெளியாவது ரொம்பவும் அபூர்வம்.

‘படம் குறித்து ஊடகங்களில் எதுவும் பேசக்கூடாது’’ என்ற நிபந்தனையுடன் தான் நட்சத்திரங்களை ஒப்பந்தம் செய்வார்,மணிரத்னம்.

நட்சத்திரங்களும் ரகசியம் காப்பது வழக்கம்.

இந்த நிலையில், பொன்னியின் செல்வன்  படத்தில் மொட்டைத் தலையுடன் தான் நடிக்கும் விவரத்தைத் தெரிவித்துள்ள நடிகர் ஜெயராம் மேலும் சில தகவல்களையும் ,பகிரங்கமாகப் போட்டு உடைத்துள்ளார்.

‘’ பொன்னியின் செல்வன்’ படத்தின் 40 % படப்பிடிப்பு முடிந்து விட்டது.’மகாபாரதம்’ கதையைப் படமாக்குவது போல், இந்த படத்தின் கதையைப் படமாக்குவது பெரிய விஷயம். இந்த படத்தில் நிறையப் பாத்திரங்கள் உள்ளன. ஏகப்பட்ட போர்க்கள காட்சிகளும் உண்டு.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரும் படங்களில் ஒன்றாக இந்தப்படம் இருக்கும். இரண்டு பாகங்களாக உருவாக்கப்படுகிறது. ஊரடங்கு காரணமாக முடங்கிப் போயிருக்கும் இந்த படத்தின் ஷுட்டிங் மீண்டும் எப்போது தொடங்கப்போகிறது என்று தெரியவில்லை.படத்தில் நடிக்க பெரும் கூட்டம் தேவைப்படுவதால், ஷுட்டிங் ஆரம்பிக்கக் கொஞ்சக் காலம் பிடிக்கும்.

இந்த படத்துக்காக நான் தலையை மொட்டை அடித்துள்ளேன். ஆழ்வார்க்கடியான் நம்பி என்ற முக்கிய வேடத்தில் நான் நடிக்கிறேன். ஷுட்டிங் மீண்டும் தொடங்கும் போது மொட்டை அடிக்க வேண்டும் என்று நினைக்கும் போது கவலையாக இருக்கிறது’’ என்று மணிரத்னம் படத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார், ஜெயராம்.