மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், கலை இயக்குநராக தோட்டா தரணி, எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

ஒரே ஒரு போஸ்டரை மட்டும் வெளியிட்டுவிட்டு, ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதால், தனியாக போஸ்டர் வெளியிடப்படாமல் இருந்தது. சமீபத்தில் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்துக்கான போஸ்டரைப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். 2022-ம் ஆண்டு வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.

ரூ. 800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை 70 சதவீதம் முடிந்துள்ள நிலையில், இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை மத்திய பிரதேசத்தில் நடத்தவுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

தன் பகுதி காட்சிகள் அனைத்தையும் நடித்து முடித்துவிட்டார் நடிகர் ஜெயம் ரவி. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இரண்டு பாகங்களாக தயாராகும் பொன்னியின் செல்வனில் தன் பகுதியின் மொத்த படப்பிடிப்பையும் நடிகர் ஜெயம் ரவி தற்போது நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.