சென்னை:

றைந்த  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவிடம் அமைப்ப தற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றும், கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறி நினைவிடம் அமைக்கப்படுவதாகவும் எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில், ஜெயலலிதா உயிரிழந்துவிட்டதால், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டதாகவும், இன்றைய தேதியில் குற்றவாளி இல்லை என்பதால் அரசு சார்பில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு நினைவிடம் கட்டப்படுவதாகவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

மாநில கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை மண்டலம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் அனுமதி பெற்று கட்டுமானப் பணிகள் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.  சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் ஜெ.க்கு நினைவிடம் கட்டப்பட்டு வருவதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெ. நினைவிடம் திறக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட டிராபிக் ராமசாமி வழக்கு உள்பட 5 வழக்குகள், கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பான வழக்கின்போது வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.