சென்னை: ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சென்னை  உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஜோன்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்தபோது நீதிமன்றம் விசாரணை கமிஷன் அமைக்க உத்தரவிட்டதை போல இதிலும் உத்தரவிட வேண்டும் என்பது மனுதாரர் கோரிக்கை விடுத்தார்.
இந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற விடுமுறைக்கால பெஞ்ச் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும், பார்த்திபன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு வழக்கறிஞர், இந்த விஷயத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்றார்.
ஆனால், ஜெயலலிதா மரணத்தில் தனக்கும் சந்தேகம் இருப்பதாக நீதிபதி வைத்தியநாதன் குறிப்பிட்டார். அவர், “ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்ந்தது முதல் எந்த வித போட்டோ, வீடியோ ஆதாரமும் வெளியாகவில்லை, எனவேதான் எனக்கும் சந்தேகம் எழுகிறது.
ஜெயலலிதா சிகிச்சை விவரம் மத்திய அரசுக்கு முழுமையாக தெரியும். மத்திய அரசுக்கு தெரிந்தும் வாயை திறக்காதது ஏன்? தமிழக அரசு இதுவரை ஆர்.டி.ஓ விசாரணைக்கு கூட உத்தரவிடவில்லை. நான் வழக்கை தொடர்ந்து விசாரித்தால் அது வேறு மாதிரி இருக்கும். ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து உடற்கூறு செய்து விசாரிக்க உத்தரவிட்டிருப்பேன். ஆனால் இது விடுமுறைக்கால பெஞ்ச் என்பதால், தொடர்ந்து விசாரிக்க முடியாது” என்று கூறிய நீதிபதி வழக்கு விசாரணையை ஜனவரி 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்று வேறு பெஞ்ச் வழக்கை விசாரிக்க உள்ளது.