சென்னை:
முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை சுவாமிநாதன் கோவிலுக்கு மின் தூக்கி வசதி செய்து தர வேண்டும் என பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா சட்டசபையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜவாஜிருல்லாவின் கோரிக்கை குறித்து ஆராய்ந்து அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும்பட்சத்தில் இந்தாண்டே அது நிறைவேற்றப்படும் என்ற உறுதியை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அளித்துள்ளார்.

சுவாமிமலை முருகன் கோவிலுக்காக இஸ்லாமிய சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் குரல் கொடுத்து கோரிக்கை வைத்த நிகழ்வு சட்டசவையில் இருந்த மற்ற உறுப்பினர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

தமிழக சட்டசபையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெறுகிறது. முன்னதாக நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா, முருகனின் ஆறுபடை வீடுகளில் 4-ம் படை வீடான சுவாமிமலை முருகன் கோவிலில் வயதான பக்தர்கள் படிக்கட்டுகளில் ஏறுவதற்கு சிரமப்படுவதாகவும் அங்கு மின் தூக்கி வசதி செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.