ஜப்பானில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதும் வயோதிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் அந்நாட்டில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது.

கொரோனா பரவலுக்குப் பிறகு நடுத்தர மற்றும் இளம் வயதினர் வீடுகளில் இருக்க பழகியதால் மது அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு கேளிக்கைகள் பெருமளவு குறைந்துள்ளது.

1995 ம் ஆண்டை ஒப்பிடும் போது 2020 ம் ஆண்டு மது விற்பனை 25 சதவீதத்துக்கும் மேல் குறைந்திருக்கிறது, இதனால் அரசுக்கு கிடைக்க வேண்டிய வரிவருவாய் வெகுவாக குறைந்திருக்கிறது.

இதனை சரி செய்ய நினைத்த அதிகாரிகள் இளைஞர்களை மது அருந்த ஊக்கப்படுத்த தேவையான வியாபார உத்திகளை வழங்க ‘சேக் விவா’ என்ற பெயரில் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

அரிசியில் இருந்து கிடைக்கும் வைன் வகையான ‘சேக்’ உள்ளிட்ட மது வகைகளின் விற்பனையை அதிகரிப்பது குறித்து சிறப்பான ஆலோசனை வழங்கும் இளைஞர்களுக்கு அந்த துறையினருடன் இனைந்து பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதம் 9 ம் தேதிக்குள் இந்த போட்டியில் பங்கேற்க பதிவு செய்யலாம் என்றும், 20 முதல் 39 வயதுள்ள இளைஞர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்றும் அறிவித்துள்ளது.

ஜப்பான் வரிவிதிப்பு துறையின் இந்த முயற்சி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைதளத்தில் பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.