ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கவுள்ள படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இது தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தைத் தெலுங்குத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் 50-வது படமாக இது உருவாகிறது. இந்தப் படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார்.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இது ராம் சரணின் 15-வது படமாகவும்.

இப்படத்திற்கான வேலைகளை முழுவீச்சில் செய்து வருகிறார் ஷங்கர். முதல்கட்டமாக நாயகியாக நடிக்க கியாரா அத்வானியை ஒப்பந்தம் செய்துள்ளார்.

ராம்சரண் படத்தின் பாடல்களுக்கு நடன இயக்குநராக ஜானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஷங்கர் – ராம்சரண் படத்தில் பணிபுரியவிருப்பது குறித்து நடன இயக்குநர் ஜானி தனது ட்விட்டர் பதிவில் :

” ‘முக்காபுலா’ பாடலுக்கு மேடை நடனமாடிக் கொண்டிருந்தவர், ‘பாய்ஸ்’ படத்தில் 500 பேரில் ஒருவராக ஆடியவனாக, நான் எப்போதுமே ஷங்கர் சாரை ரசித்திருக்கிறேன். இப்போது, அவருடைய படத்திற்கு முக்கிய நடன இயக்குநராக இணைகிறேன்.

ராம்சரண் சார் படத்தில் வேலை செய்வதை என்னாலேயே நம்ப முடியவில்லை. என் மீதான நம்பிக்கைக்கு நன்றி சார். நான் எப்போதுமே ராம்சரண் சாருக்கு நன்றியுடன் இருப்பேன். தில் ராஜூ சார் எனக்குத் தொடர்ந்து அளித்த வாய்ப்புகளுக்காக நன்றி.” என கூறியுள்ளார்.