டெல்லி: உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என பீட்டா தொடர்ந்த வழக்கில் அனைத்து  தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி பீட்டா உள்பட சில அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்துள்ளன.இந்த வழக்கு  உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, தமிழகஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தின் பகுதியாகும் என்றும்,  ஒரு குறிப்பிட்ட நடைமுறை அவசியமானதா இல்லையா என்று நீதிமன்றம் எவ்வாறு தீர்மானிக்க முடியும்?” என்று  வாதிட்டார்.. மேலும் விளையாட்டிற்கு முன்பு ஐல்லிக்கட்டு காளைகள் மருத்துவர்களால் முழுமையாக பரிசோதனை செய்யப்படுகின்றன; கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, பல சிறந்த நடைமுறைகளும் பின்பற்றப்பட்ட பிறகே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது  என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,  ஐல்லிக்கட்டிற்கு முன்பு கால்நடை மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்படும் காளைகள், ஐல்லிக்கட்டிற்கு பிறகு பரிசோதனை செய்யப் படுகிறதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பின்பும் காளைகளை பரிசோதிக்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

மேலும் ஜல்லிக்கட்டு புகைப்படங்களை உங்களுக்கு எடுத்துக் கொடுத்தது யார்? விதிமுறைகள் மீறல் தொடர்பாக எங்கேனும் புகார் அளித்தீர்களா? புகைப்படங்களின் அடிப்படையில் மட்டும் முடிவுக்கு வர முடியுமா? என பீட்டாவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். வழக்கு விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணையின்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.