ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் தலைவர் மௌலானா மசூத் அசார் சகோதரர் முஃப்தி அப்துல் ரவூஃப் பாகிஸ்தானில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ரவூஃப் விசாரணைக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

masood

பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானில் இருப்பதாக பிறகு தெரிய வந்தது. இதனால் பாகிஸ்தான் மீது இந்திய அரசு குற்றம்சாட்டியதுடன, அந்நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

இதையடுத்து, பிப்ரவரி 26-ம் தேதி இந்திய – பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டைத் தாண்டிச் சென்று இந்தியப் போர் விமானங்கள் தீவிரவாதிகள் முகாம் மீது விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தின. பாகிஸ்தான் எல்லை பால்கோட் பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ஏராளமான தீவிராதிகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதற்கு பதிலடியாக அடுத்த நாளே பாகிஸ்தான் விமானப்படை இந்திய எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தின. அந்த விமானங்களை விமானங்களை விரட்டி சென்ற இந்திய போர் விமானம் ஒன்று பாகிஸ்தான் எல்லையில் விழுந்ததில் விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டார். இதனால் இந்திய – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. அபிநந்தனை மீட்க இந்தியா துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் காரணமாக அபிநந்தனை கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் இந்திய அதிகாரிகளிடம் பாகிஸ்தான் ஒப்படைத்தது.

இதற்கிடையே எல்லையில் தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்தியா சார்பில் தக்க பதிலடியும் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் முஃப்தி அப்துல் ரவூஃப் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அவர் மட்டுமின்றி, பல்வேறு தாக்குதலில் தொடர்புடைய 44 தீவிரவாதிகளை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட ரவூஃப் விசாரணைக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் இந்தியா நடத்திய விமானப்படை தாக்குதலின் போது காயமடைந்த மசூத் அசார் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டு வந்தது. இந்தியா தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் மறுத்தாலும், பால்கோட் பகுதியில் தாக்குதல் நடந்தது உண்மை தான் என்பதை ரவூஃப் அறிக்கை மூலம் விளக்கியது குறிப்பிடத்தக்கது.