டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற முதல்நாள் சிறப்பு கூட்டத்தொடரில் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும்வ கையில்   மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. இதுகுறித்து பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மகளிர் இடஒதுக்கீடு மசோதா எங்களுடையது என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில், இந்த மசோதாவை கொண்டுவர காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொண்ட நிலையில், அதை முழுமையாக கொண்டு வர முடியாத நிலையில், தற்போது பாஜக அரசு கொண்டு வந்துள்ளது.  இதற்கு தற்போது காங்கிரஸ் கட்சி சொந்தம் கொண்டாடுவது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு பதில் அளித்துள்ள மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா,  மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டதை காங்கிரஸ் கட்சியால் ஏற்க முடியவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக, மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் மக்களவையில் தாக்கல் செய்தார். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் முதல் அலுவலாக, மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது இன்று விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்ட வர 1990களில் இருந்து பல்வேறு அரசுகள்  முயன்றும் நிறைவேற்ற முடியாத  நிலையில், தற்போது மோடி தலைமையிலான   பாஜக அரசு மசோதாவை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து ‘இது எங்களுடையது’ என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

ஏற்கனவே  2021 ஆம் ஆண்டு இந்திய பெண்கள் தேசிய கூட்டமைப்பு (NFIW)  சார்பில், மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு   மசோதாவை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரிஉச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை   உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என். பட்டி அமர்வு கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதிவிசாரித்தது.

நடைபெற்ற விசாரணையின் போது    சரமாரியாக கேள்வி எழுப்பியது. அப்போது,  “மகளிர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? ஏன் பதில் மனு தாக்கல் செய்யவில்லை?  மகளிர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த விரும்புகிறீர்களா? இல்லையா? இது மிகவும் முக்கியமான பிரச்னை” என்று கூறியதுடன், இதுதொடர்பாக  மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை வருகிற அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளது.

இந்த நிலையில், மத்தியபாஜக அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இதற்கு சோனியா காந்தி சொந்தம் கொண்டாடிய நிலையில், உள்துறை அமைச்சர் பதில் அளித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவால் இந்தியாவின் அனைத்து மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  பெண்கள் முன்னேற்றத்தில் மோடி தலைமையிலான அரசுக்கு உள்ள முழு ஈடுபாட்டையே இது வெளிப்படுத்துகிறது. வருத்தம் என்னவென்றால், எதிர்க்கட்சியால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மகளிர் இடஒதுக்கீட்டில் காங்கிரஸ் மெத்தனமாகவே செயல்பட்டுவருகிறது.

மகளிருக்கான சட்டங்களை காங்கிரஸ் காலாவதியாக விடலாம் அல்லது மசோதா தாக்கல் செய்வதை அவர்காளின் நட்பு கட்சிகள் தடுத்திருக்கலாம். திட்டத்தின் பலனை எடுத்துக்கொள்ள அவர்கள் எந்தசெயலில் ஈடுபட்டாலும் காங்கிரஸின் இரட்டை நிலைப்பாடு வெளிச்சத்திற்கு வராமல் இருக்காது என விமர்சித்துள்ளார்.