நியஸ்பாண்ட்:

நேரில் வர முடியவில்லை.. விரிவாக பிறகு பேசுகிறேன். இப்போதைக்கு இந்த தகவல்களை அனுப்புகிறேன்” என்று வாட்ஸ்அப்பில் வந்து விழுந்த்து நியூஸ்பாண்ட் அனுப்பிய செய்தி.

“மன்னார்குடி குடும்பத்தின் “திறமை” ஊர் உலகம் அறிந்ததுதான். அந்தக் குடும்பத்தினரமிருந்தே 100 கோடி ரூபாய் வாங்கி ஏமாற்றியிருக்கறார் பலே தயாரிப்பாளர் ஒருவர்.

அந்தக் குடும்பத்தை குறி வைத்த நடந்த பிரம்மாண்ட ரெய்டில், அதிகாரிகளின் முதல் குறி விவேகமான வாரிசுதான். சிறு வயதிலேயே அப்பா இறந்துவிட்டார். அம்மாவோ வீட்டைக் கவனித்துக்கொண்டாரே தவிர வேலைக்கு ஏதும் செல்லவில்லை  ஆனால் இந்த இளைஞரிடம் பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்தக்கள்! இது எப்படி என்றுதான் வருமானவரித்துறை அவரை குடாய்ந்துகொண்டிருக்கிறது.

ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், தான் பணம் கொடுத்திருக்கும் சில இடங்களைச் சொல்லியிருக்கிறார் விவேகமான இளைஞர்.

அதில் முக்கியமானவர் ஞானத்துக்கு அரசரான பிரபல தயாரிப்பாளர். இவரிடம் மன்னார்குடி குடும்பம் ஏமாந்த கதையை கேட்டவுடன் வருமானவரித்துறை அதிகாரிகளே அதிர்ச்சி அடைந்துவிட்டார்களாம்.

விசாரணையின் தீவிரம் பொறுக்க முடியாமல், தான், பணம் கொடுத்துவைத்திருப்பவர்கள் பற்றி சொல்லத்தொடங்கியிருக்கிறார் விவேகமானவர். அந்த பட்டியலைக் கேட்டு அதிகாரிகளே பிரமித்துவிட்டார்களாம்.  அத்தனை நீண்ட பட்டியல் அது. ஆனால் அவை சிறு தொகைகள்தான்.. அதாவது ஐந்து, பத்து கோடிகள்.

ஆனால் பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான ஞானத்துக்கே அரசரானவர், லம்பாக நூறு கோடி ரூபாய் வாங்கி மன்னார்குடி குடும்பத்தை சக்கையாக ஏமாற்றியிருக்கிறார்.

இந்து மதத்தின் மந்திரம் ஒன்றின் வரிகளை தலைப்பாக்கி படம் எடுத்துக்கொண்டிருந்தார் அந்த தயாரிப்பாளர். அந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை தங்களது டிவிக்கு வாங்க நினைத்தது மன்னார்குடி குடும்பம். இதையடுத்து அந்த தாயாரிப்பாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. தான் எடுத்த.. எடுக்கும் மேலும் சில படங்களையும் அந்தத்  தொலைக்காட்சிக்கு அளிப்பதாக வாக்குறுதி கொடுத்தார் அந்தத் தயாரிப்பாளர். பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது.

இந்த நிலையில்தான் உயர் பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானது. இதனால் (பெரும்.. பெரும்.. பெரும்.. பணக்கட்டுகளோடு திண்டாடியது மன்னார்குடி குடும்பம். தங்களிடம் இருக்கும் அந்த நோட்டுக்கட்டுக்களை நம்பிக்கையுள்ள பிறரிடம் கொடுத்துவைக்க எண்ணியது.

அப்போது அந்த தயாரிப்பாளரும் நினைவுக்கு வர.. அவர் அழைக்கப்பட்டார். கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம்… உடலுக்குள் ஊடுருவும் குளிர்… தனது காரில் “தோட்ட”  இல்லத்துக்கு வந்தார் அந்த ஞானமான தயாரிப்பாளர்.

அங்கே சிற்றன்னையுடன் இருந்தார் விவாகமானவர். சிற்றன்னை கண்ணசைக்க… நூறு கோடி ரூபாய்களை சூட்கேஸ்களில் வைத்து ஞானமான தயாரிப்பாளரிடம் கொடுத்தார் விவேகமானவர்.

அதன் பிறகுதான் சிற்றன்னை சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் நடந்தது.

இதுதான் வாய்ப்பு என்று, ஞானான தயாரிப்பாளர் தனது படத்தை சூரிய தொலைக்காட்சிக்கு விற்றுவிட்டார்.

இதைக் கேள்விப்பட்டு பதறிப்போன விவேகமானவர், ஞானமானவரைத் தொடர்புகொண்டு, “நாங்க கொடுத்த நூறு..?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு உரிய பதில் சொல்லவில்லை ஞானமானவர்.

இத குறித்த பஞ்சாயத்துக்களும் நடந்தன. ஆனால் ஞானமான தயாரிப்பாளர் அசரவில்லை. “எந்த எவிடன்சும் இல்லாமத்தான் பணம் வாங்கினேன். அதை “முறைப்படி” பல்வேறு பெயர்களில் பாதுகாத்து வருகிறேன். ஆகவே என்னை எதவும் செய்ய முடியாது” என்று தனது நெருங்கிய சகாக்களிடம் சொல்லிச் சிரித்திருக்கிறார் ஞானமானவர்.

இந்தத் தகவலும் விவேகமானவருக்குப் போக… அதிர்ச்சியாகிவிட்டார். “எத்தனையோ பேரை நாங்க கதற வச்சிருக்கோம். எங்களையே ஏமாத்த நினைக்கிறாரே.. மாநிலத்திலும் மத்தியிலும் நமக்கு சாதகமான நிலைமை இல்லை. அதனால் பேசியே பணத்தை வாங்க முயற்சிப்போம்” என்று தனது குடும்பத்தினரிடம் சொன்ன விவேகம், அதே போல் தொடர்ந்து பேசிவந்திருக்கிறார்.

ஆனால் ஞானமானவர் நழுவிக்கொண்டே இருந்தார்.

இந்த நிலையில்தான் வருமானவரி ரெய்டு நடந்தது.  விவேகமானவரும் உண்மைகளைச் சொல்லிவிட்டார். இப்போது வருமானவரித்துறையினர் அந்த ஞானமானர் உட்பட, விவேகத்திடமிருந்து பணம் வாங்கிய மற்ற பலரையும் விசாரிக்க தயாராகி வருகிறார்கள்.

குறிப்பாக அந்த ஞானமான தயாரிப்பாளர் விவகாரம் தலைப்புச் செய்தி ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

பின் குறிப்பு: ஞானமான தயாரிப்பாளர் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் இன்னும் உண்டு. அதை நாளை சொல்கிறேன்” – என்று சஸ்பென்ஸ் வைத்து முடித்திருந்தார் நியூஸ்பாண்ட்.