தர்மபுரி: தருமபுரியில் விதைத்தால், அது தமிழ்நாடு முழுவதும் சென்றடையும் என மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதிவு முகாமை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதத்துடன கூறினார். மகளிர் சுயமரியாதை உணர்வுடன் வாழவே மகளிர் உரிமைத்தொகை திட்டம்”, வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என பாகுபாடின்றி அனைவருக்கும் திட்டம் தீட்டி ஆட்சி செய்து வருகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மகளிர் நலன் காக்க நிறைவேற்றிய திட்டங்களைப் போற்றும் வகையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு `கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்’ என மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை திமுக அரசு அறிவித்தது.  இச்த திட்டம்  அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியானவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டனர். பின்னர். பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன.

இந்த திட்டங்களை பெற தகுதியான மகளிரை தேர்வு செய்யும் வகையில்,  விண்ணப்பங்களை பதிவு செய்யவும், அதன் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு  அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்களையும், விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான முகாம் நடைபெறும் இடம் என அனைத்து தகவல்களும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டன.  அதன்படி, விண்ணப்பங்களை பதிவு செய்யவும், பின்னர் அதனை பதிவேற்றம் செய்வதற்கும் தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரத்து 923 முகாம்கள் அரசு சார்பில் நடத்தப்பட உள்ளன.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பதிவுக்கான  முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முகாமை தொடங்கி வைத்து பயனாளியிடம் முதலமைச்சர் கலந்துரையாடினார். மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்தும் பெண்களிடம் கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்ர் ஸ்டாலின்,  மகளிருகுக மாதம் ரூ. 1,000 என்பது உதவித்தொகை அல்ல, உரிமைத்தொகை. தமிழ்நாட்டு மகளிர் தன்னம்பிக்கையோடும், சுயமரியாதையோடும் வாழ்வதற்காக கொண்டு வரப்பட்டதே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுயமரியாதை உணர்வுடன் வாழவே மகளிர் உரிமைத்தொகை திட்டம் கொண்டு வரப்பட்டது என்றார்.

கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1,000 திட்டத்தை அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்றவர்,  காலையில் பசியோடு வரும் பிள்ளைகள் எப்படி கல்வி கற்க முடியும் என்பதை மனதில் கொண்டு தொடங்கப்பட்டதே காலை உணவுத் திட்டம் என்றவர், அனைத்து பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும். காலை உணவு திட்டம் மூலம் 2 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். காலை உணவு திட்டம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார்.

மேலும், கோட்டைக்கு சென்ற நான் இட்ட முதல் கையெழுத்து, மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை. அதை திறம்பட செயல்படுத்தி வருகிறோம் என்றவர்,  மகளிர் சுய உதவிக்குழு திட்டத்துக்கு விதை போட்ட மண் தான் தருமபுரி என பெருமிதத்துடன் கூறிய ஸ்டாலின்,  தருமபுரியில் விதைத்தால், அது தமிழ்நாடு முழுவதும் சென்றடையும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால்தான் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்ப பதிவு முகாமை தருமபுரியில் தொடங்கி உள்ளோம் என்றார்.

தொடர்நது பேசியவர்,  நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்றவர், பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக கொண்டுவர உழைக்கிறோம்.

இவ்வாறு பேசினார்.