பிரபல யூடியூபரும் பைக் ரேசருமான டிடிஎப் வாசன் கடந்த செப்டம்பர் மாதம் காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட போது விபத்தில் சிக்கினார்.

இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி அடங்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து டிடிஎப் வாசன் கைது செய்யப்பட்டார்.

பொதுமக்களையும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் பைக் ஒட்டிய டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த வாசன் ஜாமீன் கோரி மனு செய்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இதனையடுத்து இன்று சிறையில் இருந்து வெளியில் வந்த டிடிஎப் வாசன் செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது தனக்கு கை அடிபட்டது கூட பெரிதாக பாதிக்கவில்லை ஆனால் தனது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது தான் மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “தன்னிடம் சர்வதேச ஓட்டுநர் உரிமம் இருப்பதாகவும் அதை வைத்து தான் தொடர்ந்து பைக் ஓட்டுவேன்” என்று புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்த டிடிஎப் வாசன் கூறினார்.