டில்லி

தமிழகத்துக்கு கர்நாடக அரசு காவிரி நீர் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற  உத்தரவின் படி காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து கொள்வதற்காகக் காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இவ்விரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்து உள்ளன.

கடந்த 30-ந்தேதி காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 89-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் diல்லியில் இருந்து காணொலி வாயிலாக நடைபெற்ற போது தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகளும் அந்தந்த மாநிலங்களில் இருந்து கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட ஒழுங்காற்றுக்குழு அதிகாரிகள், வருகிற 15-ம் தேதி வரை வினாடிக்கு 2,600 கனஅடி வீதம் தமிழகத்துக்கு  கர்நாடகம் தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என முடிவு செய்து அதனைக் கர்நாடக அதிகாரிகளிடம் வலியுறுத்தி இதனை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும் பரிந்துரைத்தனர்.

தங்களிடம் போதிய தண்ணீர் இல்லை எனக்கூறி இந்த பரிந்துரையைக் கர்நாடகா தரப்பு மறுத்தது.

இன்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், உறுப்பினர் பட்டாபிராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். கர்நாடகா, புதுச்சேரி, கேரளா அதிகாரிகளும் பங்கேற்றனர்.

கூட்ட இறுதியில் தமிழகத்திற்கு நிலுவையில் இருக்கும் 11 டி.எம்.சி நீரை வரும் 23 ஆம் தேதி வரை வினாடிக்கு 2600 கன அடி வீதம் திறக்க கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.