ஸ்ரீஹரிகோட்டா: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின்படி, முதல் கட்ட ஆளில்லா சோதனை நாளை நடைபெறுகிறது. இதற்கான  24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 8மணிக்கு தொடங்கியது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான்  பணிக்கான ஆளில்லா விமான சோதனையை இஸ்ரோ தொடங்கி உள்ளது.

உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைத் தொடர்ந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையதான இஸ்ரோ அதற்பான பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதைத்தொடர்ந்து, இந்தாண்டு டிசம்பர் மாதம் இதற்கான சோதனை நடைபெறும் என இஸ்ரோ அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த 2019ம் ஆண்டு முதல் அதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறது. இடையே கொரோனா தொற்று பரவல் காரணமாக ககன்யான் பணிகள் தொய்வடைந்தன. பின்னர் 2022 முதல் மீண்டும் பணிகள் தீவிரமடைந்தது.

இந்த நிலையில்,  நாளை, முதற்கட்டமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட வீரர்கள் மீண்டும் பூமியில் பத்திரமாக தரையிறக்குவதற்கான சோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது. இதுதொடர்பான தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இஸ்ரோ,ககன்யான் மிஷனின் முதல்படியாக,  ‘டிவி-டி1’ என்ற சோதனை ராக்கெட்டின் சோதனை ஓட்டம் நாளை நடைபெறும் என்று அறிவித்துள்ளது. அதன்படி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நாளை காலை 7 மணி முதல் 9 மணி வரை இந்த சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஆளில்லா சோதனை கவுண்ட் டவுன் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இந்த முதற்கட்ட சோதனை  திட்டம் தோல்வியில் முடிந்தால் ஆட்களை மீட்ப்பதற்கான செயல்முறை எடுத்துக்காட்டும் சோதனையை மேற்கொள்ள பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இன்டகிரேடட் ஏர் டிராப் டெஸ்ட் க்ரூ மாடல் எனப்படும் கட்டமைப்பின் மாதிரி தயாரிக்கபட்டுள்ளது.

இந்த சோதனையின்போது டெஸ்ட் ராக்கெட் பயன்படுத்தப்படும். அதாவது ஒற்றை என்ஜின் கொண்ட இந்த ராக்கெட் ஆளில்லாத க்ரூ மாட்யூலை வானுக்கு கொண்டு செல்லும். பின்னர் சுமார் 17 கி.மீ உயரத்திலிருந்து இது கீழே விடப்படும்.  இந்த செயல்பாட்டில் சுமார் மணிக்கு 1,470 கி.மீ வேகத்தில் மாட்யூல் பூமியை நோக்கி விழும். ஒரு கட்டத்தில் மாட்யூலில் உள்ள பாராசூட் விரிந்து வேகத்தை கட்டுக்குள் கொண்டு வந்து ஹரிகோட்டாவிலிருந்து 10 கி.மீ தொலைவில் வங்க கடலில் பத்திரமாக தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.