மும்பை: இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவானுக்கு அணியில் மீண்டும் இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஆட்டத்தின்போது கையில் காயமடைந்த தவான், அதன்பிறகு உலகக்கோப்பையில் விளையாடவில்லை. தற்போது வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியில் இடம்பிடிக்க தயாராக உள்ள தவான், தனது உடல் தகுதியையும் நிரூபித்துள்ளார்.

ஆனால், இளம் வீரர்கள் பலர் தங்களின் திறமையை நிரூபிக்க தயாராக இருப்பதால், அணி நிர்வாகமும், கேப்டன் விராத் கோலியும் அவர்களை தேர்வுசெய்யவே அதிக ஆர்வம் காட்டுவார்கள். உலகக்கோப்பையில் துவக்க வீரராக களமிறங்கிய ராகுலும் நன்றா ஆடினார். மாயங்க் அகர்வால் மற்றும் ஷப்மன் கில் ஆகியோர் துவக்க வரிசைக்காக காத்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் செல்லவுள்ள இந்திய அணியில் தவானுக்கு இடம் கிடைக்காது என்றே கூறப்படுகிறது. இத்தொடரில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்களின் திறன்கள் பரிசோதிக்கப்படலாம். அப்படி, தவானுக்கு இடம் கிடைக்காது போனால், இனி வரும்நாட்களிலும் அவர் இந்திய அணியில் இடம் பிடிப்பது கடினம். அந்த வகையில், தவான் இந்திய அணியிலிருந்து நிரந்தரமாக கழற்றிவிடப்படும் வாய்ப்புகள் அதிகமுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.