பெங்களூரு:

டவுளுக்கு சக்தி இருக்கிறதா என்பதை அறிய அந்த கடவுளுக்கே டெஸ்ட் வைத்திருக்கிறார்கள்  ஒரு கர்நாடக கிராம மக்கள்.

கர்நாடக மாநிலம் பெலகாவி அருகே அகசாகா என்ற கிராமம் உள்ளது. விவசாய மக்கள் நிரம்பிய இந்த கிராமத்தில் ஊருக்கு பொதுவாக மாசானகவ்வா என்ற கோவில் இருக்கிறது. இக்கோயிலில் வீற்றிருக்கும் மாயாசி தேவி என்ற கடவுள்தான் இவர்களுக்கு எல்லாமே.

தங்கள் கிராமத்தை மாயாசி தேவி காக்கிறது என்ற நம்பிக்கையில் இவர்கள் தங்கள் வீட்டுக் கதவைப் பூட்டுவதே இல்லை. தங்கள் விவசாய கருவி போன்றவற்றையும் வயலிலேயே விட்டு விட்டு வந்து விடுவார்கள். அல்லது வீட்டின் முன்பக்கம் திறந்தவெளியில் போட்டுவிடுவார்கள்.

திருட்டு போகாமல் மாயாசி தேவி காக்கும் என்கிற நம்பிக்கைதான் இதற்குக் காரணம். அதே போல இதுவரை இங்கு திருட்டு நடந்ததே இல்லை.

இந்த நிலையில் மாசான கவ்வா கோவிலில் உள்ள 18 பித்தளை மணிகளை யாரோ திருடி சென்று விட்டனர். இது, கிராம மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.  கோவிலிலேயே திருட்டு நடந்திருப்பதால் மாயாசி அம்மனுக்கு சக்தி இருக்கிறதா என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து  கோவில் முன்பு திரண்ட மக்கள், கோயிலுக்கு பூட்டு போட்டனர்.

இன்னும் 9 நாட்களுக்குள் திருட்டு போன பொருட்கள் கோயிலுக்கு வரவேண்டும். இல்லாவிட்டால் மாயாசி அம்மனுக்கு சக்தி இல்லை என்று தீர்மானித்து இனி வழிபடப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர்.

கடவுளுக்கு மக்கள் கெடு விதித்திருக்கும் சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.