சென்னை:

காத்மா காந்தியை கொன்ற கோட்சேவை நியாயப்படுத்தி கமலுக்கு எதிராக பேசிய மன்னார்குடி ஜீயருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

எங்களுடைய மதிப்பிற்குரிய மன்னார்குடி ஜீயர் அவர்கள் மகாத்மா காந்தி அவர்களும், கோட்சே வும் தேசப்பற்றுள்ளவர்கள்; தேசப்பற்றின் காரணமாகத் தான் மகாத்மா காந்தியை கோட்சே கொன்றார் என்று சொல்லியுள்ளார்.

எம்பெருமான் ஜீயர் அவர்களின் கருத்து; என்னை அதிர்ச்சியடைய வைத்தது. ஸ்ரீ கிருஷ்ணருடைய மறுஅவதாரமாக அவரை நான் பார்க்கிறேன்.  இதுவரை இந்திய அரசியலில் ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை, ஜனசங்கம், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகள் கூட மகாத்மா காந்தியையும், கோட்சே வையும் ஒன்றுபடுத்தியது கிடையாது. காந்தியின் கொலையை நியாயப்படுத்தியது கிடையாது. ஆனால் எம்பெருமான் ஜீயர் அவர்கள் இதனை நியாயப்படுத்தியிருக்கிறார்.

ஸ்ரீ ராமானுஜரை சோழ மன்னர் கைது செய்ய முயற்சித்த நேரத்தில் ஸ்ரீகூரத்தாழ்வார் ராமா னுஜருக்கு பதிலாக இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் ஆஜரானார். ராமானுஜரை தண்டிப்ப தற்கு பதிலாக கூரத்தாழ்வாரின் இரு கண்களை பிடுங்குவதற்கு சோழ மன்னர் கட்டளையிட்டார். உடனே கூரத்தாழ்வார், ‘நீ என்ன கட்டளையிடுவது, நானே எனது கண்களை பிடுங்கிக் கொள் கிறேன் என்றுச் சொல்லி, தன்னுடைய இரண்டு கண்களையும் பிடுங்கி தூர எறிந்தார். வைஷ்ணவம் நமக்கு சொல்லியிருப்பது இதுதான்.

மகாத்மா காந்தியையும், கோட்சேவையும் ஜீயர் ஒன்றுபடுத்தி பேசியதை படித்தபோது நான் அதிர்ச்சியடைந்து, இந்த செய்தியை படிக்க நேரிட்டதே என்று வருந்தி என்னுடைய இரண்டு கண்களையும் பிடுங்கி எறிந்து விடலாமா என்று கூட யோசித்தேன்.

மதநம்பிக்கை என்பது வேறு, ஆனால் அந்த நம்பிக்கையை வேறு ஒருவர் மீது திணிப்பது என்பது வேறு. இந்த காரியத்தை எந்த மதத்தினர் செய்தாலும் அவர்களை காங்கிரஸ் எதிர்க்கும்.

எம்பெருமான் ஜீயர் அவர்களிடம் பணிவாக நான் ஒரு கேள்வி கேட்கிறேன்.  மகாபாரதத்தில்  வருகிற தருமரும், துரியோதனும் ஒன்றா? ஸ்ரீ கிருஷ்ணரும், சிசுபாலனும் ஒன்றா? ராமரும், ராவனனும் ஒன்றா? ஸ்ரீ கிருஷ்ணரும், நரகாசுரனும் ஒன்றா ?

இந்த கேள்விகளுக்கு ஜீயர் பதில் சொன்னால் மகாத்மா காந்தியும், கோட்சேவும் ஒன்றா என்ற கருத்து எவ்வளவு தவறானது என்பதை அவரே புரிந்து கொள்வார்.

தேசப்பற்றின் காரணமாகத் தான் மகாத்மா காந்தியை கோட்சே கொன்றார் என்பதை ஐயா ஜீயர் அவர்கள் நியாயப்படுத்துகிறார்களா? ஏற்றுக் கொள்கிறார்களா? தான் ஏற்றுக் கொண்டிருக்கிற கொள்கைக்காக வேறு ஒருவரை கொல்வது என்பது நியாயம் தானா?

அப்படி நியாயம் என்றால், இந்த சமூகம் எங்கே போய் முடியும்? ஒவ்வொருவரும் தன்னுடைய செயல்பாடு சரிதான் என்று சொல்லி ஒரு காட்டுமிராண்டித்தனமான நிலைக்குத் தான் செல்ல முடியும்.

உதாரணத்திற்கு வைஷ்ணவத்திற்கும், சைவத்திற்கு நடந்த சண்டையை ஜீயர் அவர்கள் மறந்து விட்டாரா ? எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டார்கள் என்பதை வரலாறு நினைவுபடுத்துகிறது. இந்த செயலை இந்து மதம் செய்யவில்லை. இந்து மதத்தின் பெயரால் சில சாமியார்கள் செய்தார்கள். என்னுடைய மதிப்புமிகு ஜீயர் அவர்கள் அந்த சாமியார்களில் ஒருவராக இருக்க விரும்புகிறாரா?

அல்லது விவேகானந்தரைப் போன்று பரந்த பார்வையுடையவராக இருக்க விரும்புகிறாரா என்று அறிய விரும்புகிறேன். மாத்மா காந்தியை விட ஒரு நல்ல இந்துவை உங்களாலே அடையாளம் காட்ட முடியுமா?

சுவாமி விவேகானந்தர் அவர்கள், தங்களது ஆன்மீகப் பணிகளால் இந்து மதத்தில் மிகப்பெரிய சீர்திருத்தங்களை செய்தார். அதை சீர்குலைக்கிற வகையில் ஜீயர் போன்றவர்கள் ஈடுபடக் கூடாது.

இந்து மதத்தின் சிறப்பே சகிப்புத் தன்மை தான். அதற்கு மாறாக ஜீயர் போன்றவர்கள் இத்தகைய மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற கருத்துக்களை கூறி சமூக அமைதியை சிதைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

தேசப்பற்றின் காரணமாக மகாத்மா காந்தியை கோட்சே கொன்றார் என்று ஜீயர் சொல்கிறார். அப்படி என்றால் கோட்சே இந்த தேசத்தை அடிமையாக வைத்திருந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட்டாரா? அவர்கள் மீது கோபம் கொண்டாரா? ஆனால் இந்த தேசத்தின் சுதந்திரத்திற்காக உழைத்த மகாத்மா காந்தியை கொல்கிறார் என்று சொன்னால் அதில் தேசப்பற்று எங்கே இருக்கிறது?

மிகவும் சிக்கலான துவைதம் கொள்கையையே புரிந்து வைத்திருக்கிற ஜீயரால் இந்த எளிய உண்மையை எவ்வாறு புரிந்து கொள்ள முடியாமல் போயிற்று? அவருடைய கண்களை எது மறைத்தது? ஜீயரும் ஏதாவது ஒரு நிர்ப்பந்தத்திற்கு அடிபணிகிறாரா?

அழகிரி ஆகிய நான், மகாத்மா காந்தியினுடைய வாழ்க்கையாலும், இந்து மதத்தின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையாலும், அதே நேரத்தில் அவருடைய மதச்சார்பற்ற தன்மைகளாலும் கவரப்பட்ட ஒரு உண்மையான வைஷ்ணவ இந்து நான்.

மகாத்மா காந்தி அவர்களுடைய கொலையை நியாயப்படுத்தி ஜீயர் அவர்கள் சொன்னது என்னை மட்டுமல்ல, இந்து மதத்தைச்சார்ந்த அனைவரையும், மனிதகுலத்தின் மீது அன்பு வைத்திருக்கிற எல்லோரையும் மிகவும் காயப்படுத்தியிருக்கிறது. இந்த செயலை ஜீயர் அவர்கள் தவிர்த்திருந்தால் அவருக்கு மிகுந்த பெருமை சேர்த்திருக்கும்.

மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை நியாயப்படுத்தியதற்காக ஸ்ரீ கிருஷ்ணபிரான் அவருக்கு மிகப்பெரிய தண்டனையை வழங்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.