சென்னை: தமிழகஅரசு சார்பில் இலங்கை மக்களுக்கு உதவ ரூ.80 கோடி மதிப்பில் ரூ40டன் அரிசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது ரேசன் அரிசி என விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் சக்கரபாணி  இதுகுறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையை ஆட்சி செய்து வரும்  ராஜபக்சே குடும்பத்தினரின் நிர்வாக குளறுபடி காரணமாக அந்நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில்  சிக்கியுள்ளது.  இதனால், இலங்கை திவாலாகும் நிலைமை உருவாகி உள்ளது. இலங்கைக்க தேவையான உதவிகளை இந்தியா செய்து வருகிறது. அங்கு உணவு  உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு அண்டை நாடுகளை சார்ந்திருப்பதால் அங்கு வரலாறு காணாத உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  தேவையான அத்தியாவசிய பொருட்கள் இல்லாததால் மக்கள் பசி பட்டினியில் திண்டாடி வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு மனித மாண்போடு உதவிடும் நோக்கில் தமிழ்நாடு அரசு அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, பால் பொருள், உயிர் காக்கும் மருந்துகள் ஆகியவற்றை அனுப்பி வைக்க தயாராக உள்ளது. 80 கோடி மதிப்பில் 40 ஆயிரம் டன் அரிசி 28 கோடி மதிப்பில் மருந்து பொருட்கள். 15 கோடியில் பால் பொருட்களை வழங்க முடிவு செய்துள்ளோம்.

இலங்கைக்கு அனுப்பப்பட உள்ள 40,000 டன் அரிசி, மத்தியஅரசு, தமிழக மக்களுக்கு வழங்கும் ரேசன் அரிசி என விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சமூகவைலைதளங்களிலும் தகவல்கள் பரவி வருகின்றன. இது தமிழகஅரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளட 40ஆயிரம் டன் அரிசி பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது என்று கூறியவர், அவதூறு ஏற்படுத்த பொய்ப்பிரச்சாரம் செய்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திஅரசு மானிய விலையில் ரூ.20க்கும் தரும் அரிசியை மாநிலங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்ப இயலாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.