லாகூர்: இந்திய அணி ஏதேனும் இயந்திரம் வைத்திருக்கிறார்களா? டி20, டெஸ்ட், ஒருநாள் என அனைத்துவகை கிரிக்கெட்டிற்கும், தனித்தனியாக வீரர்களை தயாரித்து அனுப்புகிறார்கள். இளம் வீரர்கள் அருமையாக விளையாடுகிறார்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் ஆச்சர்யமும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஏதேனும் ‘இயந்திரம்’ வைத்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை. டி20, ஒருநாள், டெஸ்ட் என 3 பிரிவுகளுக்கும் சிறந்த, திறமையான இளம் வீரர்களை தயாரித்து அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரு அறிமுக வீரர்களான கருணால் பாண்ட்யா, பிரசித் கிருஷ்ணா சிறப்பாக விளையாடினர். இதன்மூலம் இந்திய அணியில் உள்ள மூத்த வீரர்கள் பொறுப்பாக விளையாடி தங்களின் இடத்தைத் தக்கவைக்காவிட்டால், அந்த இடம் இளம் வீரர்களுக்குச் சென்றுவிடும் என்ற தெளிவான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலிருந்து பார்த்து வருகிறேன்;  இந்திய அணியில் உள்ள இளம் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள், அவர்களின் வெற்றிக்கான பங்களிப்பு இங்கிலாந்து தொடரிலும் தொடர்ந்து வருகிறது.

ஆஸ்திரேலிய தொடரில் ஒவ்வொரு பிரிவிலும், ஒவ்வொரு போட்டியிலும் ஒரு இளம் வீரர் சிறந்த பங்களிப்பை அளித்தார். மூத்த வீரர்களும் வெற்றிக்கு காரணமாக இருந்தாலும், இளம் வீரர்களின் செயல்பாடு அதிகமாகப் பேசப்பட்டது. கடந்த 6 மாதங்களாக இந்திய அணியின் செயல்பாடு தங்களின் இளம் வீரர்களால் சிறப்பாக இருந்து வருகிறது.

அதனால்தான் கூறுகிறேன், இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஏதேனும் இயந்திரம் வைத்திருக்கிறதா? இப்படி திறமையான இளம் வீரர்களை ஒவ்வொரு பிரிவுக்கும் உருவாக்கி அனுப்பிக்கொண்டே இருக்கிறார்களே!!

இந்திய அணிக்கு விக்கெட் தேவையெனும்போது, முதல் போட்டியில் விளையாடிய இளம் வீரர் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நான் மீண்டும் கூறுகிறேன், ஒவ்வொரு பிரிவுக்கும் வீரர்களை தயாரிக்கும் இயந்திரத்தை இந்தியா கண்டறிந்துள்ளது.

இந்திய அணி முதல்தரமான கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள், வலிமையான இங்கிலாந்து அணியைக்கூட எளிமையாகக் கையாள்கிறார்கள். இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பேர்ஸ்டோ, ஜேஸன் ராய் இருவரின் ஆட்டமும் கடினமானதாக இருந்தது. ஆனால், மனம் தளராமல், இந்தியப் பந்துவீச்சாளர்களின் முயற்சி, துல்லியமான பந்துவீச்சு, இங்கிலாந்து அணியை வீழ்த்திவிட்டது” என்றுள்ளார் இன்சமாம்.