மும்பை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வரி வருவாயை உயர்த்துவதற்காக, வருமான வரித்துறை சார்பில் வெளியான பரிந்துரைகள் சர்ச்சையில் சிக்கியுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தேவையான நிதியைத் திரட்ட, அதேசமயம் வருமான வரி செலுத்தலையும் தீவிரப்படுத்த, ஐஆர்எஸ் எனப்படும் இந்திய வருவாய் சேவைப் பிரிவு அதிகாரிகள் சங்கத்தின் சார்பாக, மத்திய நேரடி வரி வாரியத்துக்கு புதிய பரிந்துரைகள் அனுப்பப்பட்டன.

அப்பரிந்துரைகளில், வரும் 2020 – 2021ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கான வரி விகிதம் 30% என்பதாக குறைக்கப்பட்டுள்ளது. குறுகிய கால நடவடிக்கையாக, அடுத்த 3 முதல் 6 மாதங்களுக்கு, இந்த வரி விகிதத்தை மீண்டும் 40% என்பதாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட சில பரிந்துரைகள் அடங்கியிருந்தன.

ஆனால், உரிய அனுமதியின்றி இப்படியான பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதனால் ஐஆர்எஸ் சங்கத்தின் மீது மத்திய நிதி அமைச்சகம் கோபத்தில் உள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படியான பரிந்துரைகளை தயார்செய்து, அவற்றை மத்திய நேரடி வரி வாரியத்திற்கு அனுப்பியது யார் என்பது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

patrikai.com இணையதளத்தில், வருமான வரித்துறை பரிந்துரைகள் தொடர்பாக, ஒரு விரிவான கட்டுரை (ஞாயிறு) வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.