திருச்சி

ன்னியாகுமரி விரைவு ரயிலைத் திருச்சி அருகே கவிழ்க்கச் சதித்திட்டம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது/.

நேற்று முன் தினம் மாலை 5.20 மணிக்குக் கன்னியாகுமரியில் இருந்து கன்னியாகுமரி – சென்னை விரைவு ரயில் வழக்கம் போல் சென்னைக்குப் புறப்பட்டது. இந்த ரயில் திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு வந்து, பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.  ரயில் பிச்சாண்டார் கோவில் – வாளாடி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தின் நடுவே 2 பெரிய லாரிகள் டயர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயன்றார். ரயில் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்ததால், டயர்கள் மீது ஏறி ரயில் சக்கரத்தில் லாரி டயர்கள் சிக்கி, நடுவழியில் நின்றது  இவ்வாறு மோதிய வேகத்தில் என்ஜினில் இருந்த குழாய் பழுதடைந்து ரயிலை இயக்க முடியவில்லை.

இச்சம்பவம் நள்ளிரவு 1.05 மணிக்கு நடந்துள்ளது. பிறகு பழுது நீக்கப்பட்டு, சுமார் 40 நிமிடங்கள் தாமதமாக 1.45 மணிக்கு ரயில் சென்னை புறப்பட்டுச் சென்றது. ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இது தொடர்பாக விருத்தாசலம் ரயில்வே காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிவண்ணன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பயணிகள் மத்தியில் இச்சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலான தென்மாவட்ட விரைவு ரயில்கள் செல்லும் வழித்தடத்தில், விபத்தை ஏற்படுத்தும் நோக்கில் மர்ம நபர்கள் லாரி டயர்களை வைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.