இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் கதையில், அமீர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “இறைவன் மிகப்பெரியவன்”. ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஜாஃபர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்

படத்தின் துவக்கவிழாவில் வெற்றிமாறன், அமீர், கரு.பழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இயக்குநர் கரு பழனியப்பன் பேசியதாவது…

பிரமிள் எழுதிய ஒரு வரி இந்தக்கதைக்கு போதுமானதாக இருந்துள்ளது. எழுத்தாளர்கள் கொண்டாடும் எழுத்தாளராக பிரமிள் இருந்தார். சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராப் பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதி செல்கிறது எனும் பிரமிளின் வரி மட்டும் தான் நமக்கு புரியும். மற்ற கவிதை புரியாது. இந்தப்படத்தை எடுப்பதாக சொன்னபோது அமீர் தான் இதற்கு பொருத்தமானவர் என தோன்றியது. நான் ஒரு பக்கம் ஆண்டவர் என படமெடுக்கிறேன், நீங்கள் இறைவன் மிகப்பெரியவன் என எடுக்கிறீர்கள், இரண்டுக்கும் யுவன் சங்கர் ராஜா இசை என்றால் எல்லோரும் நம்மை தான் பேசுவார்கள் என்றேன். இருக்கட்டும் என்றார்.

இறைவன் பொதுவானவனா என தெரியாது ஆனால் மனிதன் அனைவருக்கும் பொதுவானவன் என்பதை ஒரு கலைஞன் சொல்ல வேண்டிய காலம் இது, அதை இந்தப்படம் செய்யும். இந்த டைட்டிலேயே ஏன் அமீரின் இறைவன் மிகப்பெரியவன் என்று சொல்கிறீர்கள் என பிரச்சனை செய்வார்கள். இந்தக்காலத்தில் எதையுமே தவறாக புரிந்து கொள்ளும் பழக்கம் தான் அதிகம் இருக்கிறது. வெற்றிமாறனை விட இப்படத்தை அமீர் செய்வது தான் சரி.

எங்களை போல் மியூசிக் தெரியாவர்கள் படத்தில் யுவன் அழகான இசை தர காரணம் நம்பிக்கையும் புரிதலும் தான். படமெடுக்க முடிவெடுத்து விட்டால் இயக்குநரை நம்ப வேண்டும். அமீரை நம்புங்கள் படம் கண்டிப்பாக நன்றாக வரும். எந்த ஒரு வேலையை செய்தாலும் நேர்மையாக ஒழுங்காக தனித்தன்மையுடன் வேலை செய்ய வேண்டுமென நினைப்பவர் அமீர். இந்த விழா போலவே அமீர் உற்சாகமுடன் இயக்கும், இறைவன் மிகப்பெரியவன் படம் வெற்றி பெறும். ரசிகர்களுக்கும் உற்சாகம் தரும் நன்றி.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசியதாவது…

இந்தப்படத்தின் கதை எனக்கு தெரியாது. நேற்று தான் அமீர் வந்து சொன்னார் நாளைக்கு வந்து விடுங்கள் என்றார், அவர் மீது முழு நம்பிக்கை இருந்தது கரு பழனியப்பன் சொன்னது போல் அமீர் மீது நம்பிக்கை வைத்ததால் தான் இங்கு வந்தேன். அமீர் மீது எப்போதுமே எனக்கு நம்பிக்கை உள்ளது, இந்தப்படம் நன்றாக வரும். அனைவருக்கும் நன்றி

இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது..

ரொம்ப நாள் முன்னாடி தங்கம் இந்தகதையை சொன்னார் அதற்கப்புறம் ரெண்டு பேரும் வெவ்வேறு வேலைகள் செய்ய ஆரம்பித்து விட்டோம் அப்புறம் ஒரு சமயத்தில் இந்தக்கதை எடுக்கலாம் என தோன்றியது. வழக்கமாக நான் எழுதவே மாட்டேன் ஆனால் இந்தப்படத்திற்கு திரைக்கதை எழுதி முடித்துவிட்டேன், ஆனால் அப்போது செய்ய முடியவில்லை.

கதை எழுதும்போதே அமீரிடம் விவாதிப்பேன். கதையில் நான் சில மாற்றங்களை இந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றினேன். நான் எடுக்கவில்லை என்ற நிலை வந்தபோது அமீர் நான் எடுக்கவா என்றார். அவர் எடுத்தால் தான் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அவர் திரைக்கதையில் சில மாற்றங்களை அவர் வாழ்வியலில் இருந்து எடுத்து வந்துள்ளார். இன்றைய காலகட்ட பிரச்சனையை சரியான விசயங்களை சொல்ல வேண்டும் என்பது தான் நாங்கள் இணைந்து வேலை செய்ய காரணம் நன்றி.