சென்னை:

கிரிக்கெட் ரசிகர்களின்  பெரும் எதிர்பார்ப்பான ஐபிஎல் போட்டி வரும் 23ந்தேதி சென்னையில் கோலாகலமாக தொடங்க உள்ளது.  இதற்கான டிக்கெட் இன்று முதல் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

இதற்காக நேற்று இரவு முதலே ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் சேப்பாக்கத்தில் குவிந்தனர்.  இரவு அங்கேயே படுத்து தூங்கி டிக்கெட்டுகளை வாங்க காத்திருக்கின்றனர்.

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள  2019-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் திருவிழாவும்,  17வது ஐபிஎல் போட்டியும்   வரும்  23 -ம் தேதி தொடங்குகிறது. ஐ.பி.எல் தொடர் குறித்த அட்டவணையை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது.

அதன்படி, சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டி கோலாகலமாக தொடங்க உள்ளது.  தொடரின் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. முதல் போட்டி சென்னையில் தொடங்க உள்ளதால் தமிழக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்  இன்று காலை 11மணிக்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  ஆனால், டிக்கெட்டுகளை வாங்க நேற்று இரவு முதலே ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள்  சேப்பாக்கத்தில் குவியத்தொடங்கி உள்ளனர். பலர் நள்ளிரவு அங்கேயே படுத்து தூங்கி டிக்கெட்டுகளை வாங்க காத்திருக்கின்றனர்.

நேரம் செல்லச் செல்ல சேப்பாக்கத்தில் கூட்டம் அதிகரித்து வருகிறது.  கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

2019ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் 8 அணிகள் பங்கேற்கின்றன.