டில்லி,

பிரதமர் மோடி சர்வதேச அளவில் கேலிக்கு உரியவராகிவிட்டார் என டில்லி முதல்வர் தெரிவித்துள்ளார்.

பணமதிப்பிழப்பையடுத்து, பிரதமர் மோடி சர்வதேச கேலிப்பொருளாகி விட்டார் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இதுகுறித்து நிருபர்களை சந்தித்த் கெஜ்ரிவால் கூறியதாவது,

டிசம்பர் 31-ம் தேதி நாட்டு மக்களுக்கு மோடி ஆற்றிய உரையில் ஒன்றுமில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் அடைந்த ஆதாயம் மற்றும் இழப்புகள் குறித்து பேசவில்லை என்று குற்றம் சாட்டினார்.

பணமதிப்பிழப்பு காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த நடைமுறைகளையும் உலகில் உள்ள பெரிய பொருளாதார வல்லுநர்கள் தவறாக பேசுகின்றனர். சர்வதேச அளவில் கேலிக்குரியவராக இந்திய பிரதமர் மாறிவிட்டார் என்றார்.

மேலும், டாக்டர் மன்மோகன் சிங் உலக அளவில் மதிக்கப்பட்டார். ஆனால் மோடியோ, பிரதமர் அலுவலகத்தின் நற்பெயரை அழித்து விட்டார் என்று குற்றம்சாட்டினார்.

பணமில்லா பரிவர்த்தனை குறித்து பேசும் மோடி,  நன்கொடைகளை பணமாக பெற்றுக்கொண்டி ருக்கும் பா.ஜ.க.வை முதலில் ரொக்கமில்லா அமைப்பாக மாற்ற வேண்டும் என்றார்.

மேலும், சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 648 பேரின் விவரம் உள்ளது என்று கூறிய மோடி அவர்களை கைது செய்திருக்க வேண்டும் என்றும்,  பண மதிப்பிழப்பு நடவடிக்கையானது சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய ஊழல் என்று ஆவேசமாக கூறினார்.

இது முற்றிலும் அரசியல் மற்றும் ஊழலால் வழிநடத்தப்படுகிறது. அனைத்து ஊழல்களின் மொத்த உருவம் இது. எனவே, பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறாம் என்றார்.

பணமதிப்பிழப்பினால் பெற்றது என்ன? இழந்தது என்ன? என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.