சென்னை

ரும் 5 ஆம் தேதி வெளியாக உள்ள தி கேரளா ஸ்டோரி என்னும் மலையாளத் திரைப்படம் குறித்து தமிழக அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தி கேரளா ஸ்டோரி என்னும் மலையாளப்படம்  விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ளது  இந்த’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது.  இத்திரைப்படத்தில் அடா சர்மா, சித்னி இட்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கதைப்படி கேரளாவைச் சேர்ந்த 4 பெண்கள் கல்லூரி விடுதியில் ஒரே அறையில் தங்குகின்றனர். நால்வரில் ஒரு முஸ்லிம் பெண் மற்றவர்களை மூளைச் சலவை செய்யப்பட்டு முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்படுவதாகவும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்காக சிரியா போன்ற நாடுகளுக்குக் கடத்தப்படுவதாகவும் முன்னோட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டனர் என்றும் முன்னோட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.   இப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் மே 5-ம் தேதி வெளியாகிறது.  கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இப்படத்துக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்திருக்கிறது.

படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்நிலையில்  இப்படத்தைத் தமிழகத்தில் வெளியிட்டால் அது பரவலான போராட்டத்துக்கு வழிவகுக்கும் என்று தமிழக அரசுக்கு உளவுத் துறை எச்சரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உச்சநீதிமன்றம் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை வெளியிடத் தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த நிலையில், தமிழக அரசுக்கு உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக வந்த தகவல் குறிப்பிடத்தக்கதாகும்.