சென்னை: நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு 2023ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில்,  10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுத தனி தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று  அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2023, பத்தாம் வகுப்பு(10) / மேல்நிலை முதலாம் ஆண்டு(11) / இரண்டாம் ஆண்டு(12) பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து, இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. ஏற்கனவே நேரடித் தனித்தேர்வராக மேல்நிலை முதலாமாண்டு (+1) பொதுத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற / தேர்ச்சி பெறாத / வருகை புரியாத தேர்வர்கள் அனைவரும், தற்போது மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வெழுதுவதற்கும், முதலாம் ஆண்டு (+1) தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.

 தனித் தேர்வர்கள், 26.12.2022 (திங்கட்கிழமை) முதல் 03.01.2023 (செவ்வாய்க்கிழமை) வரையிலான நாட்களில் (31.12.2022 (சனிக்கிழமை) மற்றும் 01.01.2023 (ஞாயிற்றுக் கிழமை) நீங்கலாக காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களுக்கு (Service centres) நேரில் சென்று இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.

மேற்காண் தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் 05.01.2023 (வியாழக்கிழமை) முதல் 07.01.2023(சனிக்கிழமை) வரையிலான நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையத்திற்கு நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000/- (மேல்நிலை) / ரூ.500 (பத்தாம் வகுப்பு) சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்-லைனில் தத்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பிற்கு தேர்வுக்கட்டணம் ரூ.125 மற்றும் ஆன் லைன் பதிவு கட்டணம் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாம் ஆண்டு தேர்வுகளை முதல் முறையாக எழுத விண்ணப்பிக்கும் தனித்தேர்வுகள் தேர்வுக்கட்டணம் ரூ.150, இதரகட்டணம் ரூ.35 ஆன்லைன் பதிவுக்கட்டணம் ரூ. 50 மொத்தம் ரூ.235 கட்டணமாக செலுத்த வேண்டும்.

மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாம் ஆண்டு தேர்வுகளை ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெறாத, வருகை புரியாத தேர்வர்கள் ஒவ்வொரு படத்திற்கும் தேர்வு கட்டணமாக ரூ .50-யும், இதர கட்டணம் ரூ.35, ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50 ஆகியவை கட்டணமாக செலுத்த வேண்டும். மேற்காண் தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் 05.01.2023 முதல் 07.01.2023 அன்று வரை சிறப்பு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். சிறப்பு கட்டணம் பத்தாம் வகுப்பிற்க்கு ரூ.500, மேல்நிலை வகுப்புகளுக்கு ரூ.1000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களின் (Government Examinations Service centres) விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை https://dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், இவ்விவரங்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள், சம்பந்தப்பட்ட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம்

அரசாணை (நிலை) எண்.34, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு (எஸ் 1) துறை, நாள்.30.03.2022-ன் படி, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று தொழிற்கல்வி பயின்ற மாணவர்கள் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத் தேர்வுகளுக்கும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று தொழிற்கல்வி பயின்ற மாணவர்கள் மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) -க்கான தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத் தேர்வுகளுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களின் வாயிலாக மேற்குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக்கால அட்டவணை

மார்ச் / ஏப்ரல் 2023, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக் கால் அட்டவணைகளை https://dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.