மதுரை: பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 19ந்தேதி முதல் மதுரையில் இருந்து திருப்பதிக்கு நேரடி விமான சேவையை இன்டிகோ விமான நிறுவனம் தொடங்குவதாக அறிவித்து உள்ளது.

இன்டிகோ விமான நிறுவனம், மாநிலங்களுக்கு இடையே பயணிகள் விமான சேவையை அளித்து வருகிறது. இந்த நிலையில் மதுரையில் இருந்து திருப்பதிக்கு நவம்பர் 19ஆம் தேதி முதல் விமான சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூர், மும்பை, ஐதராபாத் என ஒரு நாளைக்கு 20 விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, தற்போது  மதுரையிலிருந்து திருப்பதிக்கு விமான சேவையை தொடங்க உள்ளது.

மதுரை உள்பட தென்மாவட்ட மக்களின் வேண்டுகோளை ஏற்று  திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் வகையில் இந்த விமான சேவையை தொடங்குவதாக தெரிவித்துள்ளது.

இந்த விமானம், பிற்பகல் 3 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 4:20 மணிக்கு திருப்பதி சென்றடையும் எனவும், மாலை, 4.40 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்பட்டு, மாலை 6:40 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.