நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்த 50வது ஆண்டின் கொண்டாட்டத்திற்கு முன்னதாகவே, நிலவை ஆய்வு செய்யும் சந்திராயன் விண்கலத்தை ஏவ இந்தியா தயாராகி வருகிறது.

சந்திராயன் 2 விண்கலத்தில் இருக்கும் ரோபோ ரோவர் கருவி உட்பட சில கருவிகள், நிலவை சுற்றிவந்து ஆராய்ச்சி செய்யும் என்றும், நிலவுக்கும் – பூமிக்கும் உண்டான உறவுகளை பற்றி அது ஆராய்ச்சி செய்யும் என்றும் கூறியுள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர் மயில்சாமி அண்ணாதுரை, சந்திராயன் 1 விண்கலம் நிலவில் தரையிறங்கவில்லை என்றும், ஆனால் சந்திராயன் 2 விண்கலம் நிலவில் தரையிறங்கி, நிலவில் தண்ணீர் மற்றும் நீர்பதம் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.

சந்திரயன் 2 ஒரு லேண்டர் மற்றும் ஒரு ரோவரை ஒன்றாகக் கொண்டுள்ளது. இந்த ஏவுகனை வரும் 15ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்கல ஆய்வகத்தில் இருந்து ஏவப்பட உள்ளது. சந்திராயன் 2 பூமியின் சுற்றுப்பாதையில் முதலில் நிலைநிறுத்தப்படும். பின்னர் தொடர் சூழர்ச்சிகளின் அடிப்படையில், ஏவுகனை தனது சுற்றுப்பாதையை உயர்த்தி நிலவின் சுற்றுப் பாதையில் அடியெடுத்து வைக்கும். பின்னர் நிலவு மண்டலத்திற்குள் நுழையும் போது, ஏவுகனையின் செயல்பாடுகள் மெதுவாக்கப்படும். நிலவை சுற்றியுள்ள சந்திரயான் 2 விண்கலத்தின் பயண சுற்றுப்பாதைகள், உந்துதல்களின் உதவியுடன் வேகப்படுத்தப்படுத்தப்படும்.

நிலவில் விண்கலம் தரையிறங்கும் நாளில் லேண்டர் விக்ரம், ஏவுகனையின் சுற்றுப்பாதையில் இருந்து பிரிந்து, தனது ஆராய்ச்சிகளை தொடங்கும். இந்த விக்ரம் என்கிற லேண்டர், தரையிறங்குவதற்கு முன்பு, அது தரையிறங்கும் தளத்தில் உள்ள ஆபத்துக்கள் மற்றும் பாதுகாப்பாக தரையிறங்குவது பற்றி ஆய்வுகள் நடத்தப்படும். விக்ரம் இறுதியாக செப்டம்பர் 6ம் தேதி அல்லது 7ம் தேதியன்று நிலவின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கும். அதேநேரம், ரோவர் பிரக்யான் சந்திரனின் மேற்பரப்பில் தனது ஆய்வுகளை மேற்கொள்ளும்.

இந்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து 1 வருட காலத்திற்கு மேற்கொள்ளப்படும்.

நிலவுக்கு இந்த விண்கலம் செல்லும்போது, 384,400 கி.மீ தூரத்திற்கான துள்ளியமான பாதைகளை கண்டறிந்து ஆராய்ச்சி மேற்கொள்வது, தூரம் காரணமாக அதிக பின்னணி இரைச்சலுடன் பலவீனமான ரேடியோ சிக்னல்கள் மூலம் மட்டுமே தொடர்பு இருக்கும் போன்றவைகள் எல்லாம் இந்த ஏவுகனை ஏவப்பட்ட பின்னர் விஞ்ஞானிகளுக்கு சவாலாகவே இருக்கும்.

இந்த ஏவுகனை ஏவப்படுவதன் மூலம், நிலவின் நிலபரப்பு மற்றும் அதன் தன்மை பற்றியும், அங்குள்ள மலை அல்லது மணல் பற்றியும், நிலவு மண்டலத்தின் இதர தகவல்களையும் பெறுவதோடு, சந்திர மண்டலத்தில் ஏற்படும் நிலநடுக்கம் மற்றும் அதன் தாக்கங்களை பற்றி அறிந்துக்கொள்ளவும் முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.