திம்பு

பூட்டான் நாட்டுக்குச் செல்லும் இந்தியப் பயணிகள் தினம் ரூ.1200  ($17) கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பூட்டானுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள், மாலத்தீவைச் சேர்ந்தவர்கள் மற்றும் வங்கதேசத்தவர் தவிர மற்றவர்களிடம் சுற்றுலாக் கட்டனம் வசூலிக்கப்பட்டு வந்தது.  இந்த கட்டணம் சுற்றுலா பருவ காலங்களில் தினம் 250 டாலராகவும் மற்ற காலங்களில் தினம் 200 டாலராகவும் இருந்தது.  இந்த கட்டணத்தில் இருந்து இந்தியர்கள் வங்க தேசத்தவர் மற்றும் மாலத்தீவுகளில் வசிப்போருக்கு விலக்கி வழங்கப்பட்டிருந்தது.

பூட்டானுக்கு சுற்றுலா வரும் 2.74 லட்சம் மக்களில் 1.8 லட்சம் பேர் இந்தியர்கள் ஆவார்கள்.   ஆகையால் பூட்டான் இந்தியச் சுற்றுப் பயணிகளால் மிகவும் இழப்பு அடைந்து வருவதாகக் கூறப்பட்டது.   எனவே பூட்டான் அரசு இம் மூன்று நாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கட்டணமின்றி அனுப்புவதை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாகவும் இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேசியதாகவும் தெரிவித்தது.

அத்துடன் பூட்டான் அரசு வங்கதேசம் மற்றும் மாலத்தீவு அரசுகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளது.   அதன் அடிப்படையில் இந்த மூன்று நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளிடம் ரூ.1200 அதாவது 17 டாலர் கட்டணம் வசூலிக்க உள்ளதாகப் பூட்டான் அரசு அறிவித்துள்ளது.   இந்த கட்டண முறை வரும் ஜூலை மாதத்தில் இருந்து அமலுக்கு வர உள்ளது. இந்த கட்டணம் பூட்டான் மேம்பாட்டுக் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.