புதுடெல்லி:

கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு 4 மாநிலங்களுக்கு 204 ரயில் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் இடம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு 4 மாநிலங்களுக்கு 204 ரயில் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பெட்டிகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தனிமை வார்டுகள் அமைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் உத்திரபிரதேச மாநிலத்திற்கு 70 பெட்டிகள், டெல்லிக்கு 54 பெட்டிகள், தெலங்கானாவுக்கு 60 பெட்டிகள், ஆந்திராவுக்கு 20 ரயில் பெட்டிகள் என மொத்தம் 204 ரயில் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.