புதுடெல்லி:
ந்தியா சீனாவின் நிலத்திலோ பாகிஸ்தானின் நிலத்திலோ அக்கறை செலுத்தவில்லை. அமைதியும் நட்புறவும்தான் தேவை என பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

’குஜராத் ஜன் சம்வாத்’ எனும் பாஜக-வின் இணைவழிப் பொதுக்கூட்டத்தில் காணொளி மூலம் பேசிய அவர், கொரோனா பிரச்னை நெடுநாட்களுக்கு நீடிக்காது. நமது நாட்டைச் சார்ந்த அறிவியலாளர்களும் வல்லுநர்களும் இரவு பகலாக கொரோனா தடுப்பு மருந்துக்காக உழைத்து வருகிறார்கள் என்றார்.

மேலும், ”நாட்டின் ஒரு பக்கம் பாகிஸ்தானும் இன்னொரு பக்கம் சீனாவும் உள்ளது. நமக்குத் தேவை அமைதியும் வன்முறையின்மையும்தான். நாம் பூடானில் நிலத்தையோ வங்காளதேசத்தின் நிலத்தையோ அபகரிக்க முயன்றதில்லை. நமக்கு பாகிஸ்தானின் நிலமோ சீனாவின் நிலமோ வேண்டாம். நமக்குத் தேவை அமைதி மட்டும்” என்று கூறினார். லடாக்கில் சீனாவுடன் எல்லைப் பிரச்னை விவாதிக்கப்பட்டுவரும் நிலையில் இவ்வாறு நிதின் கட்கரி பேசியது குறிப்பிடத்தக்கது.