இம்பால்:  டிஆர்டிஓ தயாரித்துள்ள அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணை இந்திய கடற்படையைச் சேர்ந்த ஐ.என்.எஸ். இம்பால் கப்பல் மூலம் சோதனை செய்யப் பட்டது. இது வெற்றிகரமாக சென்று,  இலக்கான  ‘காளையின் கண்’ணை சரியாக தாக்கி சாதனை படைத்தது.

இந்தியக் கடற்படையின் அதிநவீன வழிகாட்டி ஏவுகணை அழிப்புக் கப்பலான ஐ.என்.எஸ். இம்பால் (யார்டு 12706), தனது முதல் பிரம்மோஸ் ஏவுகணைத் தாக்கு தலை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. இதன் மூலம், இந்திய கடற்படையின் உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் ஆத்ம நிர்பார் பாரதத்தின் கப்பல் கட்டும் திறன்களின் வளர்ந்து வரும் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது.

ஐ.என்.எஸ். இம்பால் என்பது இந்திய கடற்படையின் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிக்கும் 3-வது கப்பலாகும். இது இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் (WDB) வடிவமைக்கப்பட்டது. மேலும், மும்பையின் மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் மூலம் கட்டப்பட்டது.

ஐ.என்.எஸ். இம்பால் கப்பல் உள்நாட்டு கப்பல் கட்டுமானத்தின் ஒரு அடையாளமாகும். மேலும், இது உலகின் மிகவும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போர்க்கப்பல்களில் ஒன்றாகும். 2-ம் உலகப் போரின்போது இம்பால் போரில் பங்கேற்ற இந்திய வீரர்களின் நினைவாக இக்கப்பலுக்கு இம்பால் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

இம்பால் கப்பல் 7,400 டன்கள் எடை மற்றும் 164 மீட்டர் நீளம் கொண்டது. தரையிலிருந்து வான்வழி ஏவுகணைகள், கப்பல் எதிர்ப்பு உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள், ஏவுகணைகள் மற்றும் டார்பிடோக்களை கொண்ட சக்திவாய்ந்த மற்றும் பல்துறை தளமாகும்.

4 எரிவாயு விசையாழிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வாயு மற்றும் (COGAG) உந்துவிசை தொகுப்பால் இயக்கப்படுகிறது. இது 30 வினாடிகளில் 56 கி.மீ. வேகத்தை அடையும் திறன் கொண்டது. இக்கப்பலில் சுமார் 75 சதவீதம் உள்நாட்டு தயாரிப்பு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கடற்படையின் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, யார்டு 12706 உள்ளது.  இதன்மூலம்  பிரம்மோஸ் ஏவுகணை கடலில் வீசுவதில் சிறந்து விளங்கியது. கப்பலின் உத்தியோகபூர்வ இயக்கத்திற்கு முன்னர் நடத்தப்பட்ட வெற்றிகரமான சோதனையானது, போர் தயார்நிலையில் கடற்படையின் உறுதியான அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக உள்ளது என டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.