ஸ்ரீஹரிகோட்டா: மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் தொடர்பான விண்கல பரிசோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. கடலில் விழுந்த ககன்யான் மாதிரி விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கடலில் இறக்கப்பட்ட கேப்சூல், இந்திய கப்பற்படையால் மீட்கப்பட்டது.

இஸ்ரோவின் மனிதனை விண்வெளிக்கும் அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டம் 2025ம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது.  இந்த திட்டத்திற்கான பணிகள், தற்போது அதிவேகமாக நடைபெற்று வருகிறது. அதற்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற்று வருகின்றனர். அதன் மிக முக்கிய நிலையாக கருதப்படும் விண்வெளியில் இருந்து புவிக்கும் திரும்பும் வீரர்களை, பத்திரமாக தரையிறக்கும் பணி தொடர்பான பரிசோதனையை இஸ்ரோ இன்று வெற்றிகரமாக நடத்தியது.

 ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, டிவி-டி1 என்ற பரிசோதனை விண்கலம் இன்று  காலை 10 மணியளவில் விண்ணில் வெற்றிகரமாக  செலுத்தப்பட்டது. தொடர்ந்து, திட்டமிட்டபடி குறிப்பிட்ட இலக்கை அடைந்த பிறகு, விண்கலத்தில் இருந்து பிரிந்த எஸ்கேப் பாட் திட்டமிட்டபடி கடலில் தரையிறங்கியது. இது ககன்யான் திட்டத்தில் முக முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. இந்த சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ தவைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், டிவி-டி1 என்ற பரிசோதனை விண்கலத்தில் இருந்து பிரிந்த எஸ்கேப் பாட் கேப்சூல்  இந்திய கப்பற்படையால் மீட்கப்பட்டுள்ளது. இது சென்னை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பப்பட்டு இஸ்ரோவுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த  மாதிரி விண்கலத்தை ஆய்வு செய்து தரவுகள் சேகரிக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.