டில்லி

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு 4 இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கும் ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஒ.) வானில் 25 கி.மீ. தூரம் வரையிலான இலக்குகளை அழிப்பதற்காக ஆகாஷ் ஏவுகணை அமைப்பை வடிவமைத்துத் தயாரித்து உள்ளது.   ஆகாஷ் ஏவுகணை அமைப்பு ஒரே நேரத்தில் 4 இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்தது.  டி.ஆர்.டி.ஓ.வால் இது தொடர்ந்து மேம்படுத்தப்பட்டும் வருகிறது.

நேற்று இந்த ஏவுகணை அமைப்பு விமானப்படை அதிகாரிகளால் சோதித்துப் பார்க்கப்பட்டது.

சோதனையில் வானில் இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டு இருந்த 4 ஆளில்லா விமானங்களை இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் வெற்றிகரமாகத் தாக்கி அழித்தது. ஒரே ஏவுதல் அலகில் இருந்து இது செலுத்தப்பட்டது என்பது சிறப்பாகும். ஒரே ஏவுதல் அலகில் இருந்து 4 இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்த ஏவுகணை அமைப்பைக் கொண்டிருக்கும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது.

டி.ஆர்.டி.ஓ. தனது எக்ஸ் தளத்தில்,

”ஆகாஷ் ஏவுகணை அமைப்பு இந்திய விமானப்படையால் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது. ஒற்றை ஏவுதல் அலகு மூலம் ஒரே நேரத்தில் 25 கி.மீ. தூரத்தில் 4 வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறனை வெளிப்படுத்திய முதல் நாடு இந்தியா” 

எனப் பதிவிட்டுள்ளது.