ஐ.நா. உறுப்பு நாடுகளில் போதை பொருட்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும், சர்வதேச போதை தடுப்பு மையத்தின் (ஐ.என்.சி.பி.) தலைவராக இந்தியாவை சேர்ந்த ஜக்ஜித் பவாடியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சுங்கத்துறையில் இந்திய வருவாய் அதிகாரியாக (ஐ.ஆர்.எஸ்.) பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஜக்ஜித் பவாடியா.

இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் ஐ.என்.சி.பி.யின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை, அதோடு ஐ.என்.சி.பி.யின் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் இரண்டாவது பெண் இவர்தான்.

“கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கும், அது தொடர்பான வழிகாட்டுதலை வழங்கும் பணி மற்றும் அவசர சூழ்நிலைகளில் மருத்துவ தேவைக்காக கட்டுப்படுத்தப்பட்ட விநியோகத்தை நடைமுறைப்படுத்தவும் வாரியம் கவனம் செலுத்துவதே இந்த மையத்தின் முக்கிய பணி” என்று ஐ.என்.சி.பி. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.