புதுடெல்லி:
கொரோனா வைரசால் உயிரிழப்பு அதிகரிப்பு, தடுப்பூசி பற்றாக்குறை, குறைந்த ஜிடிபி இருக்கும்போது பிரதமரின் பதில் என்பது கண்ணீர்தான் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

கடந்த இரு நாட்களுக்கு வாரணாசியில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுடன் பிரதமர் மோடி உரையாடிய போது, தனது துக்கத்தை தாங்க முடியாமல் நெகிழ்ச்சியில் கண்ணீர்விட்டு பேசமுடியாமல் தவித்தார்.

இந்த சம்பவத்தை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கிண்டல் செய்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு வெளியிட்ட உலக பொருளதாரச் சூழல் குறித்த அட்டவணையையும் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘இந்தியாவின் ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) மைனஸ் 8 சதவீதமாக இருக்கிறது.

வங்கதேசம் 3 சதவீதத்திலும், சீனா 1.9 சதவீதமும், பாகிஸ்தான் 0.4 சதவீதத்திலும் உள்ளன. ஒவ்வொரு 10 லட்சம் பேருக்கும் இந்தியாவில் 212 பேர் கொரோனாவில் உயிரிழக்கின்றனர். இது, சீனாவில் 2 பேராகவும், வியட்நாமில் 0.4 சதவீதமாகவும் இருக்கிறது. தடுப்பூசி இல்லை, குறைந்த அளவு ஜிடிபி, கொரோனாவால் அதிகரிக்கும் மரணங்கள், மத்திய அரசின் பதில் என்ன என்றால் பிரதமரின் அழுகை’ என்று தெரிவித்துள்ளார். மற்றொரு டுவிட்டர் பதிவில், ‘முதலைகள் அப்பாவிகள்; பிரதமர் மோடியின் தவறான நிர்வாக முறையால், கொரோனா பெருந்தொற்றுடன் சேர்ந்து தற்போது பிளாக் ஃபங்கஸ் பெருந்தொற்றையும் நாடு சந்திக்கிறது. இந்த நோயை சரி செய்வதற்காக கைதட்டுங்கள், சாப்பாட்டு தட்டுகளில் தட்டி ஒலி எழுப்புங்கள் என்று பிரதமர் மோடி விரைவில் கூறுவார்’ எனத் தெரிவித்துள்ளார்.