போர்ட் ஆப் ஸ்பெயின்

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்தியா கைப்பற்றி உள்ளது.

மேற்கு இந்தியத் தீவுகளுக்குச் சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.  தொடக்க இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இந்நிலையில் இந்தியா- மேற்கு இந்திய அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.  தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தனர். சிறப்பான பார்மில் உள்ள இந்த தொடக்க ஜோடி மேற்கு இந்திய அணியின் பந்துவீச்சைச் சிறப்பாக எதிர்கொண்டனர். ஷிகர் தவான் 58 ரன்கள் எடுத்திருந்த போது வால்ஷ் பந்துவீச்சில் பூரனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பிறகு ஷ்ரேயஸ் ஐயர் களமிறங்கினார். இந்திய அணி 24 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டு போட்டி தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது.  போட்டி நீண்ட நேரம் பாதிக்கப்பட்டதால் மழை நின்ற பின் போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பிறகு இந்திய வீரர்கள் பேட்டிங்கில் அதிரடி முனைப்பு காட்டினர்.

இதில் பவுண்டரிகளாக விளாசி வந்த ஷ்ரேயஸ் ஐயர் 34 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஒருபக்கம் விக்கெட்கள் சரிந்தாலும் மறுபக்கம் சுப்மன் கில் சதத்தை நெருங்கி வந்தார். போட்டியில் இந்திய அணி 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டது.

அப்போது சுப்மன் கில் 98 ரன்களுடன் களத்தில் இருந்தார். தொடர்ந்து ஆட்ட நேரம் மழையால் பாதிக்கப்பட்டதால் இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவு (36 ஓவர்களில் 225 ரன்கள்) அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.  டி.எல்.எஸ் விதிப்படி மேற்கு இந்திய அணி வெற்றி பெற 35 ஓவர்களில் 257 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

மேற்கு இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷாய் ஹோப் ,கைல் மேயெர்ஸ் களமிறங்கினர்.  கைல் மேயெர்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் ,பின்னர் வந்த ப்ரூக்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் சிராஜ் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் .  பிராண்டன் கிங் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தாலும் ஷாய் ஹோப் 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.

நிக்கோலஸ் பூரன் நிதான அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த அணியின் ஸ்கோர் 74 ரன்னாக இருந்த போது பிராண்டன் கிங் 42 ரன்களில் வெளியேறினார். நிக்கோலஸ் பூரன் 42 ரன்களில் ஆட்டமிழந்தார் .அடுத்து வந்த வீரர்களும் இந்திய அணியின் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர்,

போட்டியின் இறுதியில் மேற்கு இந்திய அணி26 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது.இந்தியா சார்பில் சாஹல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.இதனால் 119 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என இந்திய அணி கைப்பற்றியது.