பே ஓவல்: நியூசிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது மற்றும் இறுதி டி-20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 163 ரன்களை அடித்தது.

டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. அதன்படி, ராகுலுடன் புதிதாக களமிறங்கிய சாம்சன், 5 பந்துகளை சந்தித்து 2 ரன்களை மட்டுமே அடித்து வெளியேறினார்.

ராகுல் 33 பந்துகளில் 45 ரன்களை அடிக்க, ரோகித் ஷர்மா 41 பந்துகளில் 60 ரன்களை அடித்தபோது காயமடைந்து வெளியேறினார்.

மொத்த ரன்கள் 200ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷ்ரேயாஸ் அனைத்தையும் நாசமாக்கினார். தொடக்கத்தில் சற்று அதிரடியாக ஆடிய அவர், பின்னர் மோசமாக ஆடத் துவங்கினார்.

ஓவர்கள் மிகவும் குறைவாகவும், கைவசம் அதிகம் விக்கெட்டுகளும் இருந்த சூழலில், டெஸ்ட் போட்டியைப் போல் ஆடத் துவங்கினார் ஷ்ரேயாஸ். 31 பந்துகளை சந்தித்த அவர் எடுத்தது 33 ரன்களே.

அவரால்தான், 200ஐ தொட வேண்டிய ரன் எண்ணிக்கை, வெறும் 163 என்பதாக சுருங்கியது. பின்னர் வந்த மணிஷ் பாண்டே 4 பந்துகளில் 11 ரன்களை அடித்தார்.

இறுதியில், 3 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 163 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது இந்தியாவின் இன்னிங்ஸ்.