டில்லி
இந்திய அரசின் ஜிடிபி வளர்ச்சி கணிப்பு குறித்து முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் விமர்சித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதி அன்று உலக வங்கி இந்தியாவின் இந்த ஆண்டின் ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) 7.5 ஆகும் என இந்திய அரசு கூறியுள்ளதாக தெரிவித்தது. அதே நேரத்தில் அமெரிக்காவின் கோல்ட்மேன் சாச்ஸ் குழுமம் இந்த ஆண்டு ஜிடிபி வளர்ச்சி 7..25% இருக்கும் என தெரிவித்தது. இந்தியப் புள்ளியியல் துறை 6.9% என கணித்தது.
கடந்த 2014 ஆம் வருடம் அக்டோபர் முதல் 2018 ஜூன் வரை இந்திய பொருளாதார ஆலோசகராக அரவிந்த் சுப்ரமணியம் பதவி வகித்தார். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். தற்போது இவர் ஹார்வர்ட் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார். இவர் சமீபத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார்.
அந்த கட்டுரையில், “2011 ஆம் வருடத்துக்கு பிறகு கொண்டு வரப்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் ஜிடிபி கணக்கிடப்பட்டு வருகிறது. இதனால் இந்திய அரசு ஜிடிபி வளர்ச்சி குறித்து மிகையாக கணக்கிட்டுள்ளது. இந்த ஜிடிபி கிடுகிடுவென துப்பாக்கியில் இருந்து குண்டு பாயும் வேகத்தில் வளர்ச்சி அடையாது.
வழக்கமாக 2004-05 ஆண்டின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட பொருளாதார வளர்ச்சி தற்போது 2011-12 வருட அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. இது சரியானது இல்லை. நாட்டின் மொத்த வளர்ச்சியை 2011-12 ஆம் ஆண்டு மற்றும் 2016-17 ஆம் ஆண்டு இடையில் உள்ள வளர்ச்சியை வைத்து கணக்கிட முடியாது. இவ்வாறு தவறாக கணக்கிடுவது பொருளாதார சீர்திருத்தத்தைப் பாதிக்கும்.
தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இதை கருத்தில்கொண்டு கணித்தால் இந்திய ஜிடிபி வளர்ச்சி 4.5% ஆக மட்டுமே இருக்கும் அதாவது 3.5% இருந்து 5.5% வரை மாறுதல் அடையலாம். ஆனால் அதை 6.9% இருந்து 7.5 என கணிப்பது மிகையாகும். உற்பத்தி துறையில் வளர்ச்சி எதிர்பார்ப்பை விட அதிகம் இருக்கலாம்.
அரசு தேசிய வருவாய் கணக்குகள் குறித்த கணிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அது மட்டுமின்றி ஜி எஸ் டி யினால் உண்டாகும் புதிய வாய்ப்பு குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். இதன் மூலம் புதிய கொள்கைகளை அரசு முடிவு செய்ய வேண்டும். நாட்டின் வளர்ச்சியை மீட்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்” என அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.