இந்திய தொழில்துறையினரில் ஆடி கோத்ரெஜ் மற்றும் கிரண் மஸூம்தார் ஷா ஆகியோர் ஒரு கருத்தைச் சொன்னால் அது சரியாகவே இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்றுதான். எனவே, அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னாலே அது நிச்சயம் பலராலும் கவனிக்கப்பட்டு முக்கியத்துவம் பெறும்.

நரேந்திர மோடியின் அரசு, கடந்தமுறை செயல்பட்டதைவிட, இந்தமுறை தொழில்துறைக்கு எதிராக இன்னும் மோசமாக செயல்பட்டு வருகிறது என்று வர்த்தக உலகில் கூறப்படுகிறது.

சென்செக்ஸ் குறியீடு 560 புள்ளிகள் குறைந்ததும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.950 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றதும் இதை உறுதிப்படுத்துவதாய் உள்ளது. இந்தியா பொருளாதார மந்தநிலையை நோக்கி செல்வது தெளிவாக தெரிகிறது.

கடந்த 1990களின் மத்திய ஆண்டுகள் மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் இந்தியா சந்தித்த ஒரு தேக்கநிலையை நோக்கி இப்போது வேகமாக நகர்வதாக தெரிவிக்கிறார்கள் நிபுணர்கள். மேலும், அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போலவும் நேரலாம் என்றும் கூறப்படுகிறது.

நரேந்திர மோடியின் அரசு, பெரிய முதலீட்டாளர்களை இந்தியாவை நோக்கி ஈர்க்க முயற்சிக்கிறது. அதன்மூலம் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை திரட்டி, 12% பொருளாதார வளர்ச்சியை காட்ட முயல்கிறது. ஆனால், முதலீட்டாளர்களின் எண்ணமோ வேறாக இருக்கிறது. எனவே, இந்தியா பொருளாதார மந்தநிலையை நோக்கி வேகமாக சென்றுகொண்டுள்ளது என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.