சென்னை:

இந்தியாவில் உள்ள 30 மாநிலங்களையும் தனித்தனி நாடுகளாக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியன் கூறுகையில், ‘‘இந்தியா முழுவதும் பல்வேறு தேசிய இனங்கள் உள்ளது. பல மொழிகள் பேசுவோர் உள்ளனர். பண்பாடு மற்றும் கலாச்சார ரீதியாக மக்கள் வேறுபட்டுள்ளனர்.

பல இன மக்களின் முகவரியை அழிக்கும் வேளையில் ஆட்சியாளர்கள் ஈடுபடுகின்றனர். மத்தியில் பாஜக ஆட்சி வந்தது முதல் நாடு முழுவதும் பிரிவிணை வாதம் தலை தூக்கியுள்ளது. மொழி, இனம், மத ரீதியாகவும், காற்று, நீர் என அனைத்து வகையிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவை காவி மயமாக்க பலதரப்பட்ட மக்களை பாஜக நசுக்குகிறது. நாகரீக உலகிற்கு இது உகந்தது கிடையாது. ஐரோப்பா கண்டத்தில் ஜெர்மன், பிரான்ஸ் போல பல்வேறு இன, மொழி பேசும் மக்கள் தனித்தனியாக அவர்களது சுயாட்சியை நிலைநிறுத்துவது போல, இந்தியாவில் உள்ள 30 மாநிலங்களூம் தனித்தனி நாடாக்க வேண்டும்.

ஒவ்வொரு மாநிலங்களும் தனி நாடு என்ற அங்கீகாரம் பெற்று அதன் கூட்டமைப்பாக இந்தியா இருக்க வேண்டும். இந்த நிலை நம் காலத்திலேயே வரப்போகிறது ’’என்றார்.