ஐதராபாத்: ரஷ்ய கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி செப்டம்பர் மாதம் முதல் இந்தியாவில் தயாரிக்கப்படும் என டாக்டர் ரெட்டிஸ் லேப்ரட்டரி  தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 3வது அலை பரவும் வாய்ப்பு இருப்பதால், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவில்  ஏற்கனவே  கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், இவை தவிர ரஷ்யாவின் ஸ்புட்னிக்–வி தடுப்பூசிக்கும் இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிக்க இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேப்ரட்டரி அனுமதி பெற்றுள்ளது. இந்நிறுவனம் வரும்  செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிப்பு  பணியைதொடங்க உள்ளதாக அறிவித்து உள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஸ்புட்னிக்–வி தடுப்பூசி அக்டோபரில் பொதுமக்களுக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதுவரை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருவதாகவும், இது இந்தியாவில் சுமார் 80 நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள சுமார் 300 மருத்துவமனைகளில் ஸ்புட்னிக் தடுப்பூசி பயனர்களுக்கு செலுத்தப்பட்டு வருவதாகவும் டாக்டர் ரெட்டிஸ் லேப்ரட்டரி தெரிவித்து உள்ளது.