சென்னை: இணையதளத்தில்  வெளியாகும் தனிநபர் செய்திகள் மற்றும் செய்தி நிறுவனங்கள் பதிவிடும் செய்திகளை நீக்கச் சொல்வதிலும், அவர்களின் கணக்கு களை முடக்கச்சொல்வதிலும்  இந்தியா முதலிடம் வகிப்பதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்து உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் பத்திரிகையாளர்களின் உள்ளடக்கத்தைத் தடுக்க டிவிட்டருக்கு எந்த நாட்டிலும் இல்லாத கோரிக்கைகளை இந்தியா முன்வைத்தது என கூறியுள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன், இன்டர்நெட், சமூக வலைதள பயன்பாடு அதிகரித்து வருவதற்கு இணையாக இணையத்தில் பரவும் தவறான தகவல், வதந்திகளின் எண்ணிக்கையும் போட்டி போடுகிறது. ஏதாவது ஒரு செய்தியை திரித்து வெளியிட்டு, அதன் காரணமாக சர்ச்சைகளும், வன்முறைகளும் பரவி வருகிறது. சமீப காலமாக உலக நாடுகளை மிரட்டி வரும்,  கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய காலக்கட்டத்தில், இந்தியாவில்,  எண்ணற்ற போலிச் செய்திகள், தவறான தகவல்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருந்தது. இதுதொடர்பான ஆய்வின்படி, சமூக ஊடகங்களில் கோவிட்-19 தொடர்பாக மிகப்பெரிய அளவில் தவறான தகவல்கள் பரப்பப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதுபோல, தவறான செய்திகள், வதந்திகள் பரவுவதை தடுக்க இணையதளத்த முடக்குவதிலும் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், இணையதளத்தில்  வெளியாகும் தனிநபர் செய்திகள் மற்றும் செய்தி நிறுவனங்கள் பதிவிடும் செய்திகளை நீக்கச் சொல்வதிலும், அவர்களின் பக்கங்களை முடக்கச் சொல்வதிலும் இந்தியா முதலிடம் வகிப்பதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்து உள்ளது.