வாரணாசி:

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகத்திலேயே இந்தியா முதலிடத்தில் இருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம் என, துவர்க்க மடாதிபதியும் ஜோதீஸ் சங்கராச்சாரியாருமான ஸ்வரூபானந்தா சரஸ்வதி சுவாமிகள் கிண்டல் செய்துள்ளார்.

இங்கே எல்லாமும் மோடிதான் என பாஜகவினர் கோஷம் எழுப்புவது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்வரூபானந்தா சரஸ்வதி சுவாமிகள்,
“மோடி பிரதமராக பதவி ஏற்ற பின் நாடு சுபிட்சமாக இருப்பதாக மாயையை ஏற்படுத்துகின்றனர்.

குஜராத் முதல்வராக இதே மோடி பதவி வகித்தபோது, மாடுகளை கொல்லுவது என் இதயத்தில் சுடுகிறது என்று கூறினார்.

ஆனால் அவர் பிரதமரானதும் உலகிலேயே மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதன்மை நாடாக இந்தியாவை மாற்றியுள்ளார்.

மோடியால் தான் எல்லாமே சாத்தியமாகிறது என்று தம்பட்டம் அடிப்பவர்கள், மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா உலக அளவில் முதலிடத்தில் இருப்பதையும் பெருமைபடக் கூறுவார்களா?

மோடி பிரதமரானதும் மாட்டிறைச்சி வெட்டப்படுவதை விவசாய பிரிவிலிருந்து தொழில் பிரிவாக மாற்றினார்.

மாட்டிறைச்சி கூடத்திலிருந்து விமான நிலையம் வரை செல்ல சாலை வரி கிடையாது. மேலும் மாட்டிறைச்சி கூடங்களுக்கு மின் கட்டணம் 10 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது .

மோடி தொடர்ந்து பிரதமராக இருந்தால் மாடுகளை வெட்டுவோருக்கு ஆதரவாகவே செயல்படுவார். பிரதமரானதும் மாடுகளை கொல்வதற்கு தடை விதிப்பார் என்று நினைத்தோம். துரதிஷ்டவசமாக அவ்வாறு நடக்கவில்லை.

மோடி அரசை விட இஸ்லாமியர்களுக்கு சாதகமாக செயல்பட்டவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். 2.5 கோடி சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகையை வழங்கியுள்ளார். இதேபோன்று இந்து மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை” என்றார்.