டில்லி

இந்தியாவில் தண்ணீரில் கலந்து குடுக்க வேண்டிய பவுடர் வடிவ கொரோனா மருந்து வெளியாகிறது

இரண்டாம் அலை பரவலால் கொரோனாபாதிப்பு அதிகமாகி வருகிறது.   தற்போது பாதிப்பு மரணமடைந்தோர் எண்ணிக்கை மட்டுமின்றி பாதிப்பின் தீவிரமும் அதிகமாக உள்ளது.  இந்த அலையில் பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் ரெம்டெசிவிர் ஊசி உள்ளிட்டவற்றின் தேவை அவசியமாகி உள்ளது.   இதற்காக புதிய மருந்தைக் கண்டுபிடிக்க ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ 2டிஜி கொரோனா மருந்து நாளை வெளியிடப்படுகிறது. இதை டி-டியோக்ஸி டி-குளுகோஸ் ஆகியவற்றின் கலவையில், டிஆர்டிஓ-அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்), டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து 2டிஜி கொரோனா மருந்தைத் தயாரித்துள்ளது.

இதற்காக சென்டர் ஃபார் செல்லுலார் அண்ட் மாலிகுலர் பயாலாஜி (சிசிஎம்பி) உதவியுடன் டிஆர்டிஓ மற்றும் ஐஎன்எம்ஏஎஸ் அமைப்பினர் ஆய்வில் இறங்கினர். இந்த மருந்தின் மூலக்கூறுகள் கொரோனா வைரஸுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்பட்டன.  இவற்றின் அடிப்படையில் இந்த மருந்து உருவாக்கப்பட்டு கடந்த ஆண்டு மே மாதம் 2 ஆம் கட்ட பரிசோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த மருந்து 6 மருத்துவமனைகளில் சோதிக்கப்பட்டு வெற்றி அடைந்ததையொட்டி நவம்பர் மாதம் 3 ஆம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.  இந்த மூன்றாம் கட்ட பரிசோதனை 2020 ஆம் வருடம் டிசம்பர் முதல் 2021 மார்ச் வரை 27 கொரோனா மருத்துவமனைகளில் 220 நோயாளிகளிடம் பரிசோதிக்கப்பட்டது.   இந்த சோதனை முடிவில் இது சிறப்பாகச் செயல்படுவது கண்டறியப்பட்டது.

கடந்த 1 ஆம் தேதி அன்று இந்த 2 டிஜி மருந்துக்கு அவசர கால அனுமதி அளிக்கபட்டுள்ளது. பவுடர் வடிவில் உள்ள இந்த மருந்தைத் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.   இதன்பிறகு இந்த மருந்து உடலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட செற்களைக் கண்டுபிடித்து ஒருங்கிணைத்து மற்ற செல்கள் பாதிக்கப்படாமல் தடுப்பதுடன் வைரஸ் வளர்ச்சியையும் தடுக்கிறது.

நாளை வெளியாகும் இந்த மருந்து மாநிலங்களுக்கு முதலில் 10 ஆயிரம் பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் 2டிஜி கொரோனா மருந்தைத் தண்ணீரில் கலந்து நோயாளிகள் குடிக்கலாம். இந்த மருந்து மூலம் ஆக்சிஜன் உதவியோடு இருக்கும் கொரோனா நோயாளிகள் விரைவில் அதிலிருந்து மீள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.