டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துவிட்டது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 4ம் கட்டமாக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இன்று 4ம் கட்ட ஊரடங்கு தொடங்கி உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆனாலும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 100161 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துவிட்டது.
கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3144 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 38909 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். அதிக பட்சமாக மகாராஷ்டிராவில் 35086 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1249 பேர் உயிரிழந்துள்ளனர்.
2வது இடத்தில் தமிழகம் உள்ளது. 11760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 11746 பேருக்கும், டெல்லியில் 10064 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் 5375 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 5236 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.