வாஷிங்டன்: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் தடுப்பூசிகளில் 60சதவித தடுப்பூசிகளை பெற்றுள்ளது அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சி ஒன்றில் பேசியஉலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம், உலகம் முழுவதும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. கொரோனா பெருந்தொற்றை தடுக்க உலகம் முழுவதும் இதுவரை 200 கோடி தடுப்பூசிகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இதில் 60 சதவீதத் தடுப்பூசிகள் அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய 3 நாடுகளிடமே சென்றடைந்துள்ளன. உலகம் முழுவதும் இதுவரை 10 சதவீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தனி நபர் வருமானம் குறைவாக உள்ள நாடுகளில் சுமார் 0.5% தடுப்பூசிகளே சென்றடைந்துள்ளன. இன்னும் பல நாடுகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கும், வயதானர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகள் போடப்படவில்லை. எனவே, தடுப்பூசிகள் விரைவாக வினியோகம் செய்வதை நாம் அதிகரிக்க வேண்டும்.
மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசியை கொண்டு சென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன. தடுப்பூசிகள் அதிக அளவில் செலுத்தப்பட்டால் மக்களின் இயல்வு வாழ்க்கை திரும்பிவிடும்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும், கோவாக்ஸ் திட்டம் தடுப்பூசியை உலக நாடுகளிடையே பகிர்ந்தளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது என்று கூறியவர், கோவாக்ஸ் திட்டம் மூலம் சுமார் 127 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.